ஜீவன்பாய் பரியாவிற்கு நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை நெஞ்சு வலி ஏற்பட்டுவிட்டது. 2018ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபோது அவருக்கு முதல்முறை வலி வந்தது. அவரது மனைவி கபிபென் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 2022 ஏப்ரலில் அரபிக் கடலில் இழுவை படகை வழிநடத்தியபோது திடீரென மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சக தொழிலாளர்கள் அவரை படுக்க வைத்தனர். கரைக்கு செல்ல ஐந்து மணி நேரம் தேவைப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் உயிருக்கு போராடிய நிலையில் ஜீவன்பாய் இறந்துப் போனார்.
கபிபெனின் அச்சம் உண்மையாகிவிட்டது.
முதல் நெஞ்சு வலி ஏற்பட்டு ஓராண்டிற்கு பிறகு ஜீவன்பாய் மீண்டும் மீன்பிடித் தொழிலை தொடங்க முடிவு செய்தபோது, அவரது மனைவி அதை விரும்பவில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். “நான் அவரை போக வேண்டாம் என்றேன்,” எனும் கபிபென், குஜராத்தின் அம்ரேலி மாவட்டம் ஜஃப்ராபாத்தின் கடலோர சிறு நகரில் வெளிச்சம் குறைவான ஒரு குடிசையில் அமர்ந்திருந்தார்.
நகரில் இருக்கும் மற்றவர்களைப் போன்றே 60 வயது ஜீவன் பாயும் மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு எதிலும் ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வருவாய் கிடைக்காது என்பதை அறிந்திருந்தார். “40 ஆண்டுகளாக அவர் இத்தொழிலில் இருந்தார்,” என்கிறார் 55 வயது கபிபென். “நெஞ்சு வலி வந்து அவர் ஓராண்டு ஓய்வில் இருந்தபோது குடும்பத்தை நடத்துவதற்காக நான் தொழிலாளராக [மற்ற மீனவர்களுக்கு கருவாடு காய வைத்தல்]வேலை செய்தேன். நலமடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அவர் மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.”
ஜஃப்ராபாதின் மிகப்பெரும் செல்வந்த மீனவர்களில் ஒருவருக்கு சொந்தமான இழுவை படகில் அவர் வேலை செய்தார். மழைக்காலம் தவிர ஆண்டின் எஞ்சிய எட்டு மாதங்களும் இத்தொழிலாளர்கள் அரபிக் கடலில் இதுபோன்ற இழுவை படகுகளை 10-15 நாட்கள் வரை இயக்குகின்றனர். இரண்டு வாரங்களுக்கு தேவையான குடிநீர், உணவுகளையும் அவர்கள் எடுத்துச் செல்கின்றனர்.
“அவசர மருத்துவ சேவைகள் கிடைக்காமல் கடலில் பல நாட்கள் இருப்பது ஒருபோதும் பாதுகாப்பானது கிடையாது,” என்கிறார் கபிபென். “அவர்களிடம் முதலுதவி பொருட்கள் மட்டும் உள்ளது. இதய நோயாளிக்கு அது உதவாது.”














