கொம்பு வாசித்துக் கொண்டிருக்கும்போதே இறந்துவிட வேண்டும் என்பதுதான் எம்.கருப்பையாவின் ஆசை. காற்று வாத்தியமான கொம்பு வாத்தியம் என்பது வரலாற்றில் போர்க்களங்களில் யுத்தம் அறிவிக்க ஊதப்படும் வாத்தியம் ஆகும். இறந்துபோவதற்கான வாத்தியம் என்று கூட சொல்லலாம். யானையின் துதிக்கை போன்ற தோற்றத்துடன் பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படும் இந்த வாத்தியத்தை கைவிட கருப்பையா விரும்புவதற்கு அது காரணம் அல்ல.
49 வயது கருப்பையாவை பொறுத்தவரை கொம்பு வாசித்தல் என்பது அற்புதமான கலை வடிவம். நான்காம் தலைமுறை வாத்தியக் கலைஞர் அவர். மதுரையிலுள்ள அவரது கிராமத்தில் பிழைப்புக்காக வேறு வழியின்றி ஓட்டும் ஆட்டோ வேலையை காட்டிலும் அவருக்கு அதிகம் பிடித்தமானது கொம்பு வாசிக்கும் வேலைதான்.
முப்பது வருடங்களுக்கு முன் வரை, இந்த கலை உச்சத்தில் இருந்தது என்கிறார் கருப்பையா. 1991ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு கொம்பு வாத்தியம் வாசித்த அனுபவத்தை நினைவுகூர்கிறார் அவர். “அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்களை திரும்பவும் வாசிக்க சொன்னார்!”
ஆனால் இந்த நாட்களில் அவருக்கும் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அவரின் ஊரான மேலகுயில்குடியை சேர்ந்த பிற கொம்பு கலைஞர்களுக்கும் அவ்வளவாக வேலை கிடைப்பதில்லை. ஏற்கனவே இக்கலை வடிவம் தொய்வடைந்து ’பாப்’ இசை அதன் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் சூழலில் மார்ச் 2020ல் தொடங்கிய கோவிட் ஊரடங்கினால் இன்னும் அதிகமாக அக்கலை பாதிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர்களுக்கு வேலையில்லை. வருமானமுமில்லை.
கோவில்கள், பொது நிகழ்வுகள், இறுதி அஞ்சலிகள் முதலியவற்றில் வேலை கிடைத்தால், ஒரு வேலைக்கு கருப்பையா 700-லிருந்து 1000 வரை வருமானம் ஈட்டுவார். “கடந்த வருடத்திலிருந்து ஊரடங்கு காரணமாக அழகர் கோவில் திருவிழாவில் நாங்கள் வாசிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் எட்டு நாட்கள் வரை எங்களுக்கு வேலை கிடைக்கும்.” கொம்பு கலைஞர்கள் வாசிக்கும் ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் அழகர்கோவிலில் கூடுவார்கள்.
“எல்லாரும் கொம்பு வாசிக்க முடியாது. அதற்கு அதிக திறமை வேண்டும்,” என்கிறார் நாட்டுப்புற கலைஞர்களையும் கலைகளையும் ஆதரிக்கும் சென்னையை சேர்ந்த ‘மாற்று ஊடக மையத்’தின் நிறுவனரான ஆர்.காளீஸ்வரன். நிகழ்வு தொடங்கும்போதும் பிறகு நடுவேயும் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக வாசிக்கப்படுவதில்லை. கலைஞர்கள் 15 நிமிடங்களுக்கு வாசிப்பார்கள். ஐந்து நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு 15 நிமிடங்களுக்கு வாசிப்பார்கள். “வாத்தியத்தை வாசிக்கும் கலைஞர் மூச்சை நன்றாக உள்வாங்கிவிட்டு கொம்பு வாத்தியத்துக்குள் ஊதுவார்.” அதிக மூச்சை உள்ளிழுத்து விடும் அவர்களின் பயிற்சியின் காரணமாக பல கலைஞர்கள் 100 வயதாகியும் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக காளீஸ்வரன் குறிப்பிடுகிறார்.











