நல்ல வேளை, நீதிக்கான போராட்டத்தில் பதுல் மட்டும் தனியாக விடப்படவில்லை. அதனால் அழுத்தங்களுக்கு ஆளாகியிருக்கவில்லை. பதுல் வீட்டுவேலை செய்யும் இடத்தில் வீட்டு உரிமையாளரான மென்பொருள் பணியாளர், முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்வதற்கு உதவிசெய்தார். சில அரசுசாரா நிறுவனங்களும் மொகல்லா உறவினர் ஒருவரின் வீட்டு உரிமையாளரும் பதுலுக்கு ஆதரவாக நின்றனர்.
"சடலக் கூறாய்வானது, உண்மையை - நச்சுவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் இறப்பு நேர்ந்தது என்பதை உறுதிப்படுத்திவிட்டது” என்கிறார், பதுலின் உறவினரான தீபாலி தலாய். “சந்தன் வேலை செய்த நிறுவனம், மின்சாரம் தாக்கிதான் இறப்பு நேர்ந்ததாகச் சொல்லி, கூறாய்வு அறிக்கையைத் திரிக்கப்பார்த்தது. ஆனால், நடந்தது என்ன என்று ஒவ்வொருவருக்கும் தெரியும். வீட்டுவசதிக் குடியிருப்புகளில் உள்ள சாகிபுகள் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத்தொடுப்பதாகச் சொன்ன பிறகே, அவர்கள் அறிக்கையைச் சரிசெய்தார்கள். ” எனக் குமுறிய தீபாலி, ”இந்த அரசுக் கட்டமைப்பு எங்களைப் பற்றி அக்கறை இல்லாததாக இருக்கிறது; டெல்லியிலேயே இப்படி நடக்கிறது என்றால், இன்னும் தொலைவில் தள்ளியிருக்கும் கிராமங்களில் எல்லாம் நிலைமை எப்படியானதாக இருக்கும் என யோசித்துப் பார்க்கமுடியும்” என ஒரு கணம் யோசிக்கவைக்கிறார்.
பல மாதங்கள் விடாமல் கவனத்தோடு இருந்ததைத் தொடர்ந்து, சந்தனின் நிறுவனம் சார்பில் அவரின் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. பதுலுக்கு ஒரு வேலை அளிக்கப்படும் என்று உறுதியும் அளிக்கப்பட்டது. (1993-ஆம் ஆண்டு முதல் கழிப்பிட/ கழிவுநீர்க் குழிகளைக் கழுவும்போது உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 இலட்சம் வழங்கப்பட வேண்டும் என 2014 மார்ச் 27 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.)
கொடுமை என்னவென்றால், எது சந்தனின் உயிரைப் பறித்ததோ அதேமாதிரியான தூய்மைப்படுத்தும் வேலையையே பதுலுக்கும் கொடுத்தார்கள்.
” இறுதியாக...”....” சாதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. என் இணையரை என்னால் திரும்பக் கொண்டுவந்துவிட முடியாது. நான் விரும்புவதெல்லாம், மற்ற யாரும் இப்படியொரு சோதனையை அனுபவிக்கவேகூடாது என்பதுதான். ஒரு குழிக்குள்ளே யாருடைய வாழ்க்கையும் முடிந்துவிடக்கூடாது.” என்கிறார், பதுல், தீர்க்கமாக.
பதுலும் சந்தனும் பகாடி எனும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். சுந்தரவனப் பகுதியான, மேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்குனா மாவட்டத்தின் கண்டிக்பூர் கிராமத்திலிருந்து டெல்லிக்கு வந்தவர்கள். அந்த அங்காடிவளாகத்தில் சந்தனுக்கு ரூ.9,800 ஊதியமாகவும் ரூ.3,500 அறை வாடகைக்குமாக தந்தார்கள்.
அருகிலுள்ள பெருவீடுகளில் தான் பார்த்துவந்த சமையல் வேலைக்குப் போக முடியாமல் மனச்சோர்வுடன் இருக்கிறார், பதுல். மறுபடியும் சுந்தரவனப் பகுதிக்குத் திரும்பிச்செல்ல முடியாது என்பது அவருக்குத் தெரியும். அங்கே போகலாம் என்றால் அவர்களுக்கு ஒன்றும் இல்லை. அவருடைய மாமியார், மைத்துனர்கள் அடங்கிய மொத்த குடும்பமே 2 - 2.5 பிகா (ஏறத்தாழ 0.6 ஏக்கர்) நிலத்தை வைத்து ஏதோ சமாளித்துவருகிறது, என்பதுதான்.
பதுலின் ஒன்பது வயது மகன் அமித், ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமைச் சுவைத்தபடி பள்ளியிலிருந்து வீடுதிரும்புகிறான். வசந்த் பொதுப்பள்ளியில் அவன் யு.கே.ஜி. படிக்கிறான். பீசா, பர்கர் வாங்கித்தருவதற்காக தன் தந்தை அந்த அங்காடிவளாகத்துக்கு அழைத்துச்சென்றதை அவன் நினைவுறுத்துகிறான். அதைப்போலவே, அந்த நவம்பர் மாதத்தின் ஒரு நாளில், அவனுடைய அப்பா தலைமுதல் கால்வரை தையல் போடப்பட்ட ஒரு சடலமாக வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டதையும் சொல்கிறான்.