“இந்த [உச்ச நீதிமன்ற] உத்தரவு எங்களுக்கு எதிரான வன்முறையை அதிகரிக்கவே செய்யும்!”
சரோஜா சுவாமி சொல்வதைக் கேளுங்கள். ஏப்ரல் 2ஆம் தேதி மும்பையில் ஆக்ரோஷத்துடன் போராட திரண்ட தலித்துகளின், பழங்குடியினரின், நாடெங்கும் போராடிய லட்சக்கணக்கானவர்களின் கோபத்தை அவர் பிரதிபலிக்கிறார்.
“குதிரையேற்றம் செய்ததற்காக தலித் சிறுவன் கொல்லப்படும் காலத்தில் தான் இப்போதும் நாம் வாழ்கிறோம்,” என்கிறார் மத்திய மும்பையின் தாதரில் உள்ள கொட்வால் உத்யானிலிருந்து சிவாஜி பூங்கா அருகே சைத்யா பூமி நோக்கி போராட்டக்காரர்களை நடத்திச் செல்லும் 58 வயதாகும் அரசியல் செயற்பாட்டாளர் சுவாமி.
பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989ன் கீழுள்ள சில விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் மார்ச் 20 ம் தேதி அளித்த தீர்ப்பால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு எதிராக அரசு ஊழியர்கள் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டால் நியமன அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பிறகே அவர்கள் மீது வழக்குத் தொடர முடியும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
மேலும், குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்லது அற்பமானவை என்பதை தீர்மானிக்க ஒரு காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்த நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.








