அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கழித்து அவர்கள் இப்போதும் போராடுகின்றனர். இப்போது அவர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு போராடுகின்றனர்.
ஹவுசாபாய் பட்டீல் (91) டூபான் சேனா உறுப்பினர். மகாராஷ்ட்ரா மாநில சத்தாரா பகுதி ரகசிய அரசின் ஆயுத பிரிவைச் சேர்ந்தவர். அந்த அமைப்பு 1943ம் ஆண்டு பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரமடைந்துவிட்டதாக அறிவித்தது. 1943 முதல் 1946ம் ஆண்டு வரை பிரிட்டிஷின் ரயில்கள், தபால் நிலையங்கள், அவர்களின் கருவூலங்களை தாக்கும் புரட்சிகர குழுவில் இருந்தார்.
டூபான் சேனாவின் படைத்தளபதியாக இருந்தவர் ராம்சந்த்ர ஸ்ரீபதி லாட். அவரை அனைவரும் அன்போடு கேப்டன் பாவ் என்று அழைத்தனர்.(மராத்தியில் பாவ் என்றால் மூத்த சகோதரர் என்று அர்த்தம்) 1943ம் ஆண்டு ஜீன் 7ம் தேதி லாட், பிரிட்டிசாரின் அலுவலர்களுக்கான ஊதியத்தை எடுத்துக்கொண்டு புனே முதல் மிராஜ் வரை சென்ற ரயில் மீதான தாக்குதலுக்கு தலைமை வகித்தார்.
2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரை நாம் சந்தித்தபோது, அவருக்கு 94 வயதாகியிருந்தது. “எந்த ஒரு தனிநபரின் பைக்கும் அந்த பணம் சென்று சேரக்கூடாது. அது ரகசிய அரசுக்குத்தான் சென்று சேர வேண்டும் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினார். அந்தப்பணத்தை நாங்கள் ஏழைகளுக்கும், தேவை உள்ளோருக்கும் வழங்கினோம்” என்று கூறினார்.
2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற விவசாயிகள் விடுதலை நடைபயணத்தில் கலந்துகொண்ட கேப்டன் பாவ் மற்றும் ஹவுசாபாய் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலித்தொழிலாளர்களின் கோரிக்கையான பாராளுமன்றத்தின் 21 நாள் அமர்வை வேளாண் தொழில் சார்ந்த பிரச்னைகளை விவாதிப்பதற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த வீடியோக்களில் கேப்டன்பாவ், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது நமக்கு எவ்வளவு அவமானம் என்பதை நினைவு கூறுகிறார். ஹவுசாபாய், விவசாயிகளின் விளைச்சலுக்கு அரசு நல்ல விலை கொடுக்க வேண்டும் என்பதையும், விழித்துக்கொண்டு அரசு ஏழைகளுக்காக பணி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
தமிழில்: பிரியதர்சினி R.