நாடாளுமன்ற உறுப்பினராகும் வேட்பாளர்களுக்கு வீட்டில் அரைத்த மாவு கொண்டு சுட்ட பக்ரி ரொட்டியும் குழந்தைகள் பறித்து வந்த சரோலி பழங்களையும் கொடுத்து உபசரிக்கும் வாய்ப்பை நிச்சயமாக அம்பாபானிவாசிகள் விரும்பவே செய்கின்றனர்.
ஆனால் அரசியல்வாதி என அவரும் அவர்களது ஊருக்கு வந்ததே இல்லை. மூங்கில், மண், மாட்டுச்சாணம் கொண்டு முதல் வீடு அங்கு கட்டப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகி விட்டன. ஒருவரும் வரவில்லை. கற்கள் நிறைந்த, கரடுமுரடான மலைப்பகுதியின் சரிவில் அமைந்திருக்கும் அந்த குக்கிராமத்திலிருந்து, போக்குவரத்துக்கான சாலையை சென்றடையவே 13 கிலோமீட்டர் தூரம் ஆகும்.
818 பேர் (கணக்கெடுப்பு 2011) வசிக்கும் அம்பாபானியில் சாலை கிடையாது. மின்சார வசதி, குடிநீர் இணைப்பு, செல்ஃபோன் இணைப்பு, நியாயவிலைக் கடை, ஆரம்ப சுகாதார மையம், அங்கன்வாடி என எதுவும் கிடையாது. மாநிலத்தில் பட்டியல் பழங்குடியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் பவாரா சமூகத்தை சேர்ந்த மக்கள்தான் அங்கு வசிக்கின்றனர். 120 குடும்பங்களில் பெரும்பாலானோர், மத்தியப்பிரதேசத்தின் பெரிய நான்கைந்து சமூக இனக்குழுக்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களாக இருக்கின்றனர்.
இணையவசதி இல்லாத அப்பகுதியில் தொலைக்காட்சியும் இல்லை, செல்பேசிகளும் இல்லை. தாலியை பறித்துக் கொள்வது பற்றிய மோடியின் பேச்சோ அரசியல் சாசனத்தை காக்க வேண்டுமென பேசும் காங்கிரஸின் நோக்கம் பற்றியோ அந்த கிராமத்துக்கு தெரியாது. 2024ம் ஆண்டின் மக்களவை பிரசாரம் அம்பாபானி வாக்காளர்களை எட்டவே இல்லை.
மக்கள் விரும்பும் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, “சாலை” என பதிலளிக்கிறார் உங்க்யா குர்ஜா பவாரா. 56 வயதான அவர், குக்கிராமத்தின் பூர்வக்குடிகளின் வம்சாவளியை சேர்ந்தவர். பத்து வருடங்களுக்கு முன், வீட்டுக்கு ஓரு உலோக அலமாரி அவர் வாங்கியபோது, நான்கு பேர் அந்த 75 கிலோ அலமாரியை, “மருத்துவ ஸ்ட்ரெச்சர்” போல மலைக்கு தூக்கி வந்தனர்.
விவசாய விளைச்சல், மலைக்குக் கீழ் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொஹ்ராலே சந்தைக்கு இரு சக்கர வாகனங்களில் ஒவ்வொரு குவிண்டாலாக கொண்டு செல்லப்படும். அந்த பாதை தூசு நிறைந்து செங்குத்தான சரிவுகளையும் மேடுகளையும் கூர்மையான திருப்பங்களையும் ஓடைகளையும் கரடிகளையும் கொண்டது.
“அதே நேரத்தில், சாலை வந்தால் மரம் வெட்டு சட்டவிரோதமாக கடத்தப்படுவது அதிகரிக்குமோ என்ற பயமும் இருக்கிறது,” என்கிறார் உங்க்யா.



















