"சிறுவர்கள் டோலு நடனத்தில் அவ்வளவு திறமைசாலிகள் அல்ல", என்று 15 வயதாகும் விஜயலட்சுமி வெளிப்படையாகக் கூறுகிறார். "நாங்கள் நன்றாக ஆடுவோம்".

அவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று தான் தோன்றுகிறது. மெல்லிய தேகம் கொண்ட சிறுமிகள் கனமான பறையை (ட்ரம்களை) தங்களது மெலிதான இடுப்பில் கட்டிக்கொண்டு அனுபவமிக்க நடன கலைஞர்களின் நடனத்துக்கு மத்தியில் துல்லியமாக சுற்றிச் சுழன்று ஆடுகின்றனர். எல்லா நேரங்களிலும் சரியாக ஒத்திசைவுடன் தாளமும் சேர்ந்தே இருக்கிறது.

அவர்கள் இளம்பெண்கள். அவர்களில் மூத்த பெணுக்குக் கூட இன்னும் 18 வயது ஆகவில்லை. ஆனால் உடல் ரீதியாக மிகுந்த ஆற்றல் தேவைப்படும் இந்த நடனத்தை மிகுந்த ஆற்றலுடனும் சுலபமாகவும் அவர்கள் ஆடுகின்றனர் என்பது நம்மை வியக்கச் செய்கிறது. டோலு நடனம் கர்நாடகாவில் பிரபலமான நாட்டுப்புற நடனம். கன்னடத்தில் டோலு குனிதா என்றால் பறையை (ட்ரம்களை) வைத்துக்கொண்டு நடனமாடுவது. இதனை காண்டு காலே என்றும் அழைப்பர் அதாவது ஆண்களின் திறமை அல்லது ஆண்களின் கலை என்று பொருள். கனமான ஆண்கள் 10 கிலோ எடையுள்ள பறையை (ட்ரம்களை) தங்களது இடுப்பில் கட்டிக்கொண்டு வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் ஆடுகின்றனர். நடனம் ஆடுபவர்கள் நல்ல கனமான ஆண்களாகவும் அதிக வலிமை மற்றும் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டுமென்று மரபார்ந்த அறிவு எண்ணியிருந்தது.

சில பெண்கள் இந்த பாரம்பரியத்தை உடைக்கத் தொடங்கிய முன்னர் வரை தான் அது. இங்கே ஹேசரகட்டாவில், நகர மையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் பெங்களூரக்கு வெளியே நெல் வயல்களும், தென்னை மரங்களும் நிறைந்தது இந்த இடம். இந்தப் பசுமையான சூழலில் இருக்கும் கலாச்சார நிலையை மாற்ற இந்த பெண்கள் குழு தொடங்கிவிட்டது. இந்த வகையான டோலு நடனம் பெண்களுக்கான நடனமல்ல என்ற கருத்தை அவர்கள் சவால் செய்கின்றனர். பரவலாக நம்பப்படுகின்ற இந்த கட்டுக்கதையை புறக்கணித்து கடினமான பறையை (ட்ரம்ஸை) இப்பெண்கள் ஏற்றுக்கொண்டனர்.

காணொளியில் காண்க : தென்னிந்தியா முழுவதிலும் இருந்து வந்த பெண்கள் தெருவோரத்தில் வாழும் வாழ்க்கையில் இருந்து காப்பாற்ற ஒரு அமைப்பு உதவியது , அவர்கள் 10 கிலோ எடையுள்ள பறையை தூக்கி டோலு நடனமாடுகின்றனர்

பெண்கள் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து வந்தவர்கள். பல மாநிலத்திலும், பகுதிகளிலும் தெருவோரத்தில் வசித்து வந்த அவர்களை ஷ்பார்ஷா என்ற லாப நோக்கற்ற அறக்கட்டளை அவர்களுக்கு வீட்டையும் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்கள் அனைவரும் கல்வி கற்று வருகின்றனர் மேலும் அவர்கள் நடனம் மற்றும் பாடுவதையும் கற்று வருகின்றனர். வாரம் முழுவதும் அவர்கள் பள்ளி புத்தகத்தை படிக்கின்றனர். வார இறுதியில் தங்களது பறை இசைக்கு நடனம் ஆடுகின்றனர்.

நான் அவர்கள் தற்போது தங்கியிருக்கும் விடுதியில் காத்திருந்தேன். அவர்கள் உள்ளே நுழைந்தனர் - சிரித்த முகத்துடன். ஆச்சரியமாக இருந்தது, பள்ளியில் பொழுதை கழித்துவிட்டு அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

ஆனால் பறையைப் பற்றி பேசுவதற்கு முன்பாக பள்ளி படிப்பு மற்றும் கனவுகளைப் பற்றி பேசி விடலாம்: "இயற்பியல் சுலபமானது", என்று தமிழகத்திலிருந்து வந்திருக்கும் 17 வயதாகும் கனிகா கூறுகிறார். உயிரியல் தான் உண்மையில் கடினமானது "ஏனென்றால் அதில் ஆங்கில கலைச்சொற்கள் இருக்கும்". அவருக்கு அறிவியல் என்றால் பிடிக்கும், "குறிப்பாக இயற்பியல் ஏனென்றால் அதில் நாம் கற்றுக் கொள்ளும் அனைத்துமே நமது தினசரி வாழ்க்கையில் இருப்பது. இருப்பினும், "என்னிடம் நீண்ட கால இலக்குகள் எதுவும் இல்லை", என்று கூறுகிறார் அவர். "எதுவும் தெரியாதவர்கள் தான் அதிகம் சாதிப்பார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது", என்று அவர் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

17 வயதாகும் நரசம்மா, "எனக்கு கலை என்றால் உயிர். வரைவது மற்றும் வடிவமைப்பது என்னுடைய பொழுதுபோக்கு. நான் பெரும்பாலும் மலைகள் மற்றும் ஆறுகளின் படங்களை வரைவேன். நான் வளரும்போது, எனக்கு பெற்றோர்கள் இல்லை அதனால் நான் குப்பைகள் பொருக்கிக் கொண்டிருந்தேன். அதனால் இயற்கையை வரைவது ஒரு வித அமைதியைத் தரும். அது என்னுடைய கடந்த காலத்தை மறக்க உதவுகிறது", என்று அவர் கூறுகிறார்.

Narsamma playing the dollu kunitha
PHOTO • Vishaka George
Gautami plays the dollu kunitha
PHOTO • Vishaka George

நரசம்மா (இடது) மற்றும் கௌதமி (வலது) வாரம் முழுவதும் படிக்கின்றனர் , ஆனால் வார இறுதியில் தங்களது பறை இசைக்கு நடனமாடுகின்றனர்

நரசம்மா தனது 9 வயதில் ஆந்திர மாநிலம் சித்தூரில் குப்பை பொருக்கும் பணியிலிருந்து மீட்கப்பட்டார். அவருடைய பல குறிக்கோள்களை பற்றி பேச அவருக்கு எந்த தூண்டுதலும் தேவைப்படவில்லை. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் ஆடை வடிவமைப்பு, நர்சிங் மற்றும் நடிப்பு ஆகியவை. இந்த புதிய வாழ்க்கையில் அவர் பெருமைப்படத்தக்க கூடிய தருணமாக கூறுவது எதை என்றால் ஒரு நாடகத்தில் தான் குழந்தை திருமணத்தை எதிர்த்து போராடும் பெற்றோராக நடித்ததையே. "பெற்றோர்கள் ஏன் தங்களது குழந்தைகளுக்கு இப்படி செய்கிறார்கள்?" என்று அவர் கேட்கிறார். "அது மலர வேண்டிய மொட்டை பறிப்பதைப் போன்றது என்கிறார்".

Kavya V (left) and Narsamma S (right) playing the drums
PHOTO • Vishaka George

காவியா (இடது) மற்றும் நரசம்மா (வலது) ஆகியோர் தங்களது நடனத்திற்கு முன்பு எப்படி ஆற்றலோடு இருந்தார்களோ அப்படியே தங்களது உடல்ரதியான கடினமான ஆற்றலை கேட்கும் நடனத்திற்கு பிறகும் இருக்கின்றனர்

அவர்கள் பேசும் போதே அவர்கள் நடனமாட தயாராகின்றனர், பீப்பாய் போன்ற பறையை தங்களது சிறிய இடுப்பில் கட்டிக் கொள்கின்றனர், அந்தப் பறை அவர்களின் அளவில் பாதி அல்லது அதற்கும் அதிகமாகத் தான் இருக்கிறது.

பின்னர் - ஆற்றல் வெளிப்பட்டது. இந்த நடனத்திற்கு உடல் ஆற்றல் அதிகமாக தேவைப்படுகிறது, அவர்கள் எந்தத் தடையுமில்லாமல் நடனமாடுவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களது ஆற்றல் மிகவும் தொற்றிக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது, எனது கால்களை தாளமிடுவதை என்னால் நிறுத்த முடியவில்லை.

அவர்கள் நடனத்தை முடித்ததும் வெறும் பார்வையாளராகிய எனக்கே அவர்கள் ஆடியதை கண்டு சற்று களைப்பாக இருக்கிறது. ஆனால் அவர்கள் எந்த சோர்வையும் காட்டவில்லை மேலும் அவர்கள் மாலை நேரத்தில் பூங்காவிற்கு உலாவச் சென்று இருக்கின்றனர். இந்தக் குழு டோலு நடனத்தை பொழுது போக்கு மற்றும் கலாச்சார நடைமுறையாக பின்பற்றி வருகிறது. அவர்கள் இதுவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை அல்லது இதன் மூலம் வருமானம் ஈட்டவில்லை. ஆனால் அவர்கள் அதைத் தேர்வு செய்தால் அவர்களால் சுலபமாக செய்ய முடியும்.

தமிழில்: சோனியா போஸ்

Vishaka George

Vishaka George is Senior Editor at PARI. She reports on livelihoods and environmental issues. Vishaka heads PARI's Social Media functions and works in the Education team to take PARI's stories into the classroom and get students to document issues around them.

Other stories by Vishaka George
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose