1970ம் ஆண்டுதான் தாது சால்வேவின் வாழ்க்கையின் திருப்புமுனை நேர்ந்தது. மகாராஷ்டிராவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் டாக்டர் அம்பேத்கரின் சமூக, பண்பாட்டு, அரசியல் இயக்கத்தை கொண்டு சென்று கொண்டிருந்த பாடகரான வாமன்தாதா கர்தாக்கை அவர் சந்தித்தார். கர்தாக் அப்பணியை தன் இறுதிமூச்சு வரை செய்து கொண்டிருந்தார்.
75 வயது மாதவ்ராவ் கெயிக்வாட், வாமன்தாதா கர்தாக் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். வாமன்தாதாவை சந்திக்க தாதுவை அழைத்துச் சென்றவர் அவர்தான். மாதவ்ராவும் அவரின் 61 வயது மனைவியும் வாமன்தாதா கைப்பட எழுதிய 5,000 பாடல்களை சேகரித்துள்ளனர்
மாதவ்ராவ் சொல்கையில், “அவர் நகருக்கு 1970-ல் வந்தார். அம்பேத்கரின் பணியையும் செய்தியையும் பரப்பவென ஒரு பாடகர் குழுவை உருவாக்க ஆர்வத்துடன் இருந்தார். தாது சால்வே அம்பேத்கரை பற்றி பாடினார். ஆனால் அவரிடம் நல்ல பாடல்கள் இருக்கவில்லை. எனவே நாங்கள் சென்று வாமன்தாதாவை சந்தித்து, ‘உங்களின் பாடல்கள் எங்களுக்கு வேண்டும்,’ என்றோம்,” என்கிறார்.
தன் பணியை எப்போதும் ஒரு இடத்தில் வைத்துக் கொண்டதில்லை எனக் கூறியிருக்கிறார் வாமன்தாதா: “நான் எழுதுகிறேன், பாடுகிறேன், பிறகு அதை அங்கேயே விட்டு விடுகிறேன்.”
“அத்தகைய பொக்கிஷம் வீணாகப் போகிறதே என நாங்கள் கவலைப்பட்டோம். அவர் (வாமன்தாதா) தன் மொத்த வாழ்க்கையையும் அம்பேத்கரிய இயக்கத்துக்கு அர்ப்பணித்தார்,” என மாதவ்ராவ் நினைவுகூருகிறார்.
அவரது பணியை தொடரும் ஆர்வத்தில் மாதவ்ராவ், வாமன்தாதா பாடும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தாது சால்வேவை அழைத்துச் செல்லத் தொடங்கினார்: “தாது அவருக்கு ஹார்மோனியம் வாசிப்பார். அவர் பாடுவதை நான் உடனே எழுதுவேன். அப்பப்போதே அவை நடந்தன.”
5,000-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பதிப்பிக்க முடிந்தது. அவையன்றி, 3,000 பாடல்கள் வெளிவரவே இல்லை. “பொருளாதாரப் பிரச்சினையால் அதை என்னால் செய்ய முடியவில்லை. ஆனால், தாது சால்வே இருந்ததால் மட்டும்தான் அம்பேத்கரிய இயக்கம் பற்றிய இந்த அறிவையும் ஞானத்தையும் என்னால் பாதுகாக்க முடிந்தது,” என்கிறார் அவர்.
வாமன்தாதாவின் பணியால் ஈர்க்கப்பட்ட தாது சால்வே, கலா பதக் என்கிற பெயரில் ஒரு குழு தொடங்க முடிவெடுத்தார். ஷங்கர் தபாஜி கெயிக்வாட், சஞ்சய் நாதா ஜாதவ், ரகு கங்காராம் சால்வே மற்றும் மிலிந்த் ஷிண்டே ஆகியோரை ஒப்புக் கொள்ள வைத்தார். பீம் சந்தேஷ் கயான் குழு என குழுவுக்கு பெயர் சூட்டப்பட்டது. அம்பேத்கரின் செய்தியை பரப்பும் இசைக்குழு என அர்த்தம்.
ஒரு நோக்கத்தை நிறைவேற்றவென அவர்கள் பாடியதால், அவர்களின் நிகழ்ச்சிகள் யாரையும் குறைத்து பேசுவதாக இருக்கவில்லை.
இப்பாடலை தாது நமக்காக பாடுகிறார்: