ஃபாத்திமா பானு ஒரு கவிதை சொல்லிக் கொண்டிருந்தார்: ”மேலே காற்றாடி சுழலக், கீழே குழந்தை தூங்குகிறது,” என்கிறார் இந்தியில் அவர். ”தூங்கு குழந்தை தூங்கு, பெரிய சிவப்புக் கட்டிலில் தூங்கு…” எல்லாருடைய கண்களும் நோக்கிக் கொண்டிருக்க, ஒன்பது வயது குழந்தை வகுப்புக்கு வந்திருக்கும் குழந்தைகளில் கவனிக்கப்படாமல் இருப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். ராஜாஜி புலிகள் காப்பகத்தில் இருக்கும் வன குஜ்ஜார் குப்பத்தில் இருந்தது வகுப்பறை.
அந்த நாளில் அவர்களின் பள்ளி, தபாஸ்ஸம் பீவி வீட்டின் வெளிப்புறம் நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய கம்பளத்தின் மீது அமர்ந்திருந்த மாணவர்கள் 5லிருந்து 13 வயதுக்குள் இருந்தனர். சில மாணவர்கள் புத்தகங்களை உறுதியாக பிடித்துக் கொண்டிருந்தனர். தபாஸ்ஸம் பீவியின் மகனும் மகளும் அவர்களில் இருந்தனர். இந்தக் குப்பத்தில் இருக்கும் அனைவரையும் போல, அவரின் குடும்பமும் எருமை மாடுகளை வளர்த்து அவற்றின் பாலை விற்று வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தது,
2015ம் ஆண்டிலிருந்து குனாவ் சாட் பகுதியில் வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது அறையிலோ பள்ளி அவ்வப்போது கூடிக் கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 வரை அவ்வப்போது நடத்தப்பட்டது. ஃபாத்திமா பானோ கவிதை சொல்லிக் கொண்டிருந்த டிசம்பர் 2020 அன்று, 11 மாணவிகளும் 16 மாணவர்களும் இருந்தனர்.
வன குஜ்ஜாரின் ஓர் இளைஞர் குழுதான் அவர்களின் ஆசிரியர்கள். உத்தரகாஅண்டின் குனாவ் சாட் பகுதியிலிருக்கும் 200 குடும்பங்களிடம் நிலவிய கல்விக்கான தொடர் இடைவெளியை அவர்கள் நிரப்ப முயலுகின்றனர். (70,000க்கும் 100,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான வன குஜ்ஜார்கள் குமாவோன் மற்றும் கர்வால் பகுதிகளில் வசிப்பதாகக் கணக்கு சொல்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். உத்தரகாண்டில் இதர பிறபடுத்தப்பட்ட சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் அவர்கள் பட்டியல் பழங்குடியாக தங்களை அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.) புலிகள் காப்பகத்தில் இருக்கும் வசிப்பிடங்கள் பெரும்பாலும் மண் அல்லது குடிசை வீடுகளாகத்தான் இருக்கின்றன. நிரந்தரக் கட்டுமானத்துக்கு வனத்துறை தடை விதித்திருக்கிறது. கழிவறை வசதிகள் கிடையாது. நீருக்கு காட்டின் ஓடைகள்தான்.














