அருகே இருக்கும் சுகாதார உதவியை பெறக் கூட அணையின் நீர்த்தேக்கத்தில் இரண்டு மணி நேரம் படகில் பயணிக்க வேண்டும். இல்லையெனில் அரைகுறையாக போடப்பட்ட சாலையில் ஓர் உயர்மலையை ஏறி கடக்க வேண்டும்.
பிரபா கோலோரி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார். குழந்தை பெறும் காலத்தை நெருங்கியிருந்தார்.
பிற்பகல் 2 மணிக்கு கொடாகுடா கிராமத்தை அடைந்தபோது குழந்தை பிறக்கும் வாய்ப்பில்லை என எண்ணி பிரபாவின் அண்டைவீட்டார் அவரது வீட்டை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
35 வயது பிரபா மூன்று மாதங்களிலேயே மகனை இழந்தவர். ஆறு வயதில் ஒரு மகள் அவருக்கு இருக்கிறார். இருவரையும் வீட்டில் வைத்தே உள்ளூர் வைத்தியச்சிகளின் உதவியுடன் எந்த பிரச்சினையும் இல்லாமல் பெற்றெடுத்தார். இம்முறை வைத்தியச்சிகள் தயங்கினர். குழந்தை பிறப்பு சிக்கலாக இருக்கும் என்பதை அவர்கள் கணித்திருந்தனர்.
அன்று மதியம் நான் இருந்த கிராமத்தில் ஒரு கட்டுரைக்கான செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தபோதுதான் தொலைபேசி அழைப்பு வந்தது. நண்பர் ஒருவரது மோட்டார் பைக்கை (எனக்கு சொந்தமான ஸ்கூட்டி மலைச்சாலைகளை தாங்காது) எடுத்துக் கொண்டு கொடாகுடாவுக்கு சென்றேன். ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் அது. மொத்தமாக 60 பேர் மட்டுமே வசிக்கும் ஊர்.
அத்தனை சுலபமாக அடைந்திட முடியாத இடத்தில் ஊர் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் மத்திய இந்தியாவில் இருக்கும் பழங்குடி பகுதிகளை போலவே சித்ரகொண்டா ஒன்றியத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த கிராமமும் நக்சலைட் போராளிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான மோதல்களை கண்டிருக்கிறது. சாலைகளும் பிற கட்டமைப்புகளும் இங்கு மிக மோசமாகவே இருக்கின்றன.












