நான்காவது முறையாக கர்ப்பம் ஆனதும் இந்த குழந்தை வேண்டாம் என முடிவெடுத்தார் கமலா. இதற்காக அவர் தன்னுடைய கிராமத்திலிருந்து 30கிமீ தொலைவிலுள்ள பெனூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு செல்லவில்லை. இதுவரை தனது வீட்டிற்கு அருகில் வாரத்திற்கு ஒருமுறை நடைபெறும் சந்தைக்கு அவர் மட்டுமே சென்றுள்ளார். “எனக்கு இந்த இடம் பற்றி எதுவும் தெரியாது. என் கணவர்தான் கண்டுபிடித்தார்” என்கிறார் கமலா.
30 வயதாகும் கமலாவும் அவரது கணவர் ரவியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது), 35, கோண்டு ஆதிவாசி சமூகத்தினர். முதலில் இவர்கள் இருவரும் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள உள்ளூர் ‘மருத்துவரை’ அணுகியுள்ளனர். “இவரைப் பற்றி நண்பரொருவர் கூறினார்” என்கிறார் கமலா. தனது வீட்டுக்கு அருகிலுள்ள இடத்தில் காய்கறிகளை விளைவித்து அதை சந்தையில் விற்கிறார் கமலா. அவரது கணவர் உள்ளூர் சந்தையில் தொழிலாளராக இருப்பதோடு தன்னுடைய இரண்டு சகோதரர்களோடு சேர்ந்து மூன்று ஏக்கர் நிலத்தில் கோதுமையும் சோளமும் பயிரிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் க்ளினிக் நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தாலே எளிதாக தெரிகிறது. இது ‘மருத்துவமணை’ என அழைக்கப்பட்டாலும், அதன் நுழைவாயிலில் ‘மருத்துவர்’ என்ற எந்த பெயர் பலகையும் இல்லை. ஆனால் அங்கு கட்டி தொங்க விடப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் அவரது பெயருக்கு முன்னால் ‘மருத்துவர்’ என்ற தலைப்பு உள்ளது.
தனது கையில் ஐந்து மாத்திரைகளை கொடுத்த ‘மருத்துவர்’, அதை மூன்று நாளைக்கு சாப்பிடுமாறு கூறி ரூ.500 வாங்கிக்கொண்டு அடுத்த நோயாளியை பார்க்க தயாராகிவிட்டதாக கூறுகிறார் கமலா. மாத்திரைகள் குறித்தோ, அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தோ, மிக முக்கியமாக எப்படி, எப்போது கருக்கலைப்பை எதிர்பார்க்கலாம் போன்ற எந்த தகவல்களையும் மருத்துவர் கூறவில்லை.
மருந்தை எடுத்துக்கொண்ட சில மணி நேரம் கழித்து, கமலாவுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது. “சில நாட்கள் காத்திருந்தும் கசிவு நிற்கவில்லை. அதனால் மாத்திரை கொடுத்த மருத்துவரிடம் திரும்பவும் சென்றேன். அவரோ, ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று சுத்தம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். கருப்பை வழியாக குழாய் மூலம் அகற்றுவது என்பதையே ‘சுத்தப்படுத்தல்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதமான குளிர்கால வெயிலில், பெனூர் ஆரம்ப சுகாதார மையத்தின் வெளியே அமர்ந்துள்ள கமலா, மருத்துவ கருக்கலைப்பு நடைமுறைக்காக காத்திருக்கிறார். இதை செய்வதற்கு முப்பது நிமிடமே ஆனாலும், சிகிச்சைக்கு முன்பும் பின்பும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். கட்டாயம் எடுக்கப்பட வேண்டிய ரத்த மற்றும் சிறுநீர் சோதனைகளை முந்தைய நாளே முடித்துவிட்டனர்.
சட்டிஸ்கரின் நாராயனபூரில் உள்ள பெரிய ஆரம்ப சுகாதார மையமான இது, 2019-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. ஒளிரும் தாய்மார்கள் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் ஓவியம் வரையப்பட்டுள்ள சிறப்பு மகப்பேறு அறைகள், 10 படுக்கை கொண்ட அறை, 3 படுக்கை கொண்ட பேறுகால அறை, அழுத்த அனற்கலம் எந்திரம், நிறைமாத கர்ப்பிணி இங்கேயே தங்கிகொள்வதற்கான வசதிகள், சமையல் தோட்டம் போன்ற வசதிகள் இங்குள்ளன. பஸ்தரில் பெரும்பாண்மையாக ஆதிவாசிகள் வசிக்கும் பகுதியில், பொது சுகாதார சேவைக்கு சிறந்த உதாரணமாக இது திகழ்கிறது.












