வடமேற்கு மகாராஷ்டிராவின் சத்புதா மலைகளுக்கு மத்தியில் இருக்கும் பலாய் கிராமத்திலுள்ள ஒரு குடிசை வீட்டுக்குள், எட்டு வயது ஷர்மிளா பவ்ரா பெரிய கத்திரிக்கோல்கள், துணி, ஊசி மற்றும் நூல் ஆகியவற்றுடன் ஒரு மேஜைக்கு முன் அமர்ந்திருக்கிறார்
மேஜையின் மீது தையல் இயந்திரம். முந்தைய நாள் இரவு, தந்தை மிச்சம் விட்டுப் போயிருந்த துணி அதில் இருந்தது. அதன் ஒவ்வொரு மடிப்புக்கும் மெருகேற்றி அவருக்கிருந்த திறன் கொண்டு தைத்துக் கொண்டிருந்தார்.
மார்ச் 2020ல் தொற்றால் ஊரடங்கு தொடங்கி பள்ளி மூடப்பட்டப் பிறகு நந்துர்பார் மாவட்டத்தின் டோரன்மல் பகுதியின் கிராமத்திலுள்ள அவர் வீட்டின் இந்த மேஜைதான் கற்பதற்கான இடமாக இருக்கிறது. “அப்பாவும் அம்மாவும் தைத்ததைப் பார்த்து இந்த இயந்திரத்தை இயக்க நானாகக் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர்.
பள்ளியில் ஷர்மிளா படித்தவை 18 மாத இடைவெளியில் மறந்தே போய்விட்டது.
பலாயில் பள்ளிக்கூடம் இல்லை. குழந்தைகளுக்கு கல்விக் கிடைக்க வேண்டுமென்பதற்காக 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அடல் பிகாரி வாஜ்பாயி சர்வதேசப் பள்ளியில் ஷர்மிளாவை ஜூன் 2019ல் பெற்றோர் சேர்த்து விட்டனர். மகாராஷ்டிராவின் சர்வதேச கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, மாவட்ட சபையால் நடத்தப்படும் 60 ஆசிரமசாலைகளில் (பட்டியல் பழங்குடி குழந்தைகளுக்கென நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள்) அந்தப் பள்ளியும் ஒன்று. 2018ம் ஆண்டில் சர்வதேச தரத்திலான கல்வியை வழங்கும் பொருட்டு உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட மராத்தி வழிக் கல்வி வழங்கவென உருவாக்கப்பட்ட வாரியம். (அதற்குப் பிறகு வாரியம் கலைக்கப்பட்டு விட்டதால், அப்பள்ளிகள் தற்போது மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்குகின்றன.)
















