“காந்தியின் நாட்குறிப்பில் உங்களது எண்ணைப் பார்த்தோம். நெடுஞ்சாலைக்கு அருகில் கார் மோதி அவர் உயிரிழந்து விட்டார்.” என்று அந்தப் பகுதியில் மளிகையின் கடையின் உரிமையாளராக உள்ளவரும், அரசியல் செயற்பாட்டாளருமான பி.கிருஷ்ணையா கடந்த டிசம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை அன்று 7.30 மணியளவில் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார்.

நான் நவம்பர் 24 அன்று பெங்களூரு-ஹைதராபாத் நெடுஞ்சாலைப் பகுதியில் கங்கப்பாவை இல்லை காந்தியைக் கடைசியாகப் பார்த்தேன். அப்போது காலை 10:30 மணி இருக்கும். அவர் அவரது பணியைத் துவங்க காந்தி வேடம் அணிந்து அனந்தபூர் நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார். அவர் அனந்தபூர் பகுதியிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராப்தடுக் கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கி இருந்தார். ”ஏறத்தாழ இரண்டு மாதத்திற்கு முன்னர், யார் வயதான முதியவர் ஒருவருக்கு தங்க இடம் வேண்டும் என்று கூறினார்கள். எனவே, நான் அவரை இங்கு தங்குவதற்கு அனுமதித்தேன். ஏன் சில சமயங்களில் அவருக்கு உணவும் அளித்துள்ளேன்” என்றார் அந்த உணவகத்தின் உரிமையாளரான வெங்கடராமி ரெட்டி. என்னைத் தொலைபேசியில் அழைத்த கிருஷ்ணையா இந்தக் கடையில் தேநீர் அருந்தி விட்டு என்னை அழைத்தார். அவர் எப்போதாவது தான் கங்கப்பா உடன் பேசி வந்துள்ளார்.

நான் அவர் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் பாரியில் ஒரு கட்டுரை எழுதினேன். 70 ஆண்டுகள் விவசாயக்கூலியாகப் பணிபுரிந்த அவர், தற்போது மகாத்மா காந்திப் போன்று தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். காந்தி போன்று உடை அணிந்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அனந்தபூர் நகரின் பொதுவிடங்களில் சிலைப் போன்று நிற்கிறார். அதன் மூலம் இரந்து அவர் ஈட்டக்கூடிய வருமானமானது, அவர் விவசாயக்கூலியாக உழைத்து சம்பாதித்ததைவிட அதிகமாவே இருந்துள்ளது.

வயல்களில் வேலை செய்யும் போது மயக்கம் வரத்தொடங்கியதை அடுத்து, கங்கப்பா கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து விவசாயக்கூலியாகப் பணிபுரிவதை நிறுத்தியுள்ளார். அதற்குப்பின்னர்,பணம் ஈட்டுவதற்காக கயிறு திரிக்கத் தொடங்கியுள்ளார். ஆனால், அவரின் வயது முதிர்வின் காரணமாக அவரால் அதிகபணம் ஈட்டமுடியவில்லை.எனவே, அவர் காந்தியைப் போன்று வேடமிட முடிவுசெய்திருக்கிறார்.

மேலும், தினம் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் இருந்தே தனது மாறுவேட அலங்காரத்தை மேம்படுத்தி இருந்திருக்கிறார். அவர் காந்தியைப் போன்று “பிரகாசமாக” இருப்பதற்காக 10 ரூபாய் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள பான்ஸ் முகப்பூச்சைப் பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, சாலையோரக் கடைகளில் மலிவு விலைக்கு வாங்கியக் கண்ணாடிகளே அவருக்கு காந்தியின் கண்ணாடிகளாக இருந்துள்ளது. அங்குள்ள சந்தையில் 10 ரூபாய்க்கு வாங்கிய கரும்பை ஊன்றுக் கோலாக கொண்டுள்ளார். எங்கேயோ கண்டெடுத்தக் இருசக்கர வாகனத்தின் முன்புறக்கண்ணாடியையே அவர் உடை மாறுவேடம் தரிப்பதற்கும், வேடம் போடுவதற்கும் பயன்படுத்தியுள்ளார்.

M. Anjanamma and family
PHOTO • Rahul M.

இடது: கடந்த 2017 ஆம் ஆண்டு நான் அவரைப் பார்த்தபோது ‘காந்தியாக’ உருமாறுவதற்காக கங்கப்பா டால்கம் பவுடரைப் பூசிக்கொண்டிருந்தார். வலது: அவரது கிராமத்தில் அவர் மனைவி அனியானம்மா(இடது பக்கத்தில் இருந்து மூன்றாவது நபர்) உடன் உள்ளார்

இதனைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு 2016லிருந்து,ஒவ்வொரு நாளும், கங்கப்பா காந்தியாக வேடம் அணிந்து, அனந்தபூர் தெருக்களில் நின்றுள்ளார் அல்லது சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சுற்றியுள்ள இடங்களில் மாதச் சந்தைகளில் கண்காட்சிப் போன்று நிற்பதற்காக நடந்துச் சென்றுள்ளார். இதன் வழியாக நாளொன்றுக்கு ரூ.150 முதல் ரூ.600 ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளார். “நான் சமீபமாக ஒரு பர்சாவுக்கு நாளொன்றுக்கு ஏறத்தாழ1000 ரூபாய் சம்பாதித்தேன்”.என்று பெருமையோடு கூறினார்.

காந்தி போன்றதொரு பலமற்ற மனிதன் பலம்பொருந்திய பேரரசர்களையே நடுங்கச்செய்து, அடிபணிய வைத்தது அவரது சிறுவயதியிலேயே கங்கப்பாவை கவர்ந்ததாக அவர் கூறி இருந்தார். மேலும், காந்தியைப் போன்று இருப்பதற்கு பயணமும் பொறுமையும் இன்றியமையாதது என்றும் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி, பயணிப்பதன் வழியாக தொடர்ந்து புதிய மனிதர்களைச் சந்திப்பதன் வழியாக தனது மெய்யான வாழ்வின் பாழடைந்த நிலையிலிருந்து அவரது  ஒடுக்கபட்டச் சமூக(மாடிகா)த்திலிருந்தும் விடுபட முயன்றார்

நான் முதன்முறையாகக் கங்கப்பாவைச் சந்தித்தப் போது, அவர் அவரது சாதி குறித்து எழுத வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஏனென்றால்,அவர் அனந்தபூர் பகுதியில் உள்ள கோவிலில் இரவு உறங்குவதாகவும்,அவர் ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சார்ந்தவர் என்று யாரிடமும் கூறவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும்,காந்தியாக மாறுவேடம் போட்டுக்கொள்ளும் போதும் கூட, பூசாரியைப் போன்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மதஅடையாளங்களான பூணூல் அணிந்து கொண்டும், குங்குமம் வைத்துக்கொண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

கங்கப்பா தன் அடையாளங்களை மறைத்துக் கொள்ளும் அதே வேளையில், அவரது சாதியையும் வறுமையும் அவரை எல்லா இடங்களிலும் தொடரவே செய்தது. நான் கங்கப்பாவிடமிருந்து பிரிந்த வாழ்ந்த அவரது மனைவி எம்.அஞ்சனம்மாவை கடந்த 2017ஆம் ஆண்டு சந்தித்த போது குடும்ப படம் ஒன்று எடுக்க கோரினேன். அப்போது அந்த கிராமத்தின் வீடுகளில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்று, தலித் மக்களோடு இணைந்து புகைப்படம் எடுத்துகொள்ள விரும்பவில்லை என்றும் கூறியது.

கிருஷ்ணையா என்னை தொலைபேசியில் அழைத்த அந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, நான் எனது கட்டுரையில் இருந்த சில குறிப்புகளையும், அவரது குடும்ப புகைப்படத்தையும் அனுப்பி வைத்தேன். ஆனால்,அப்போது அஞ்சனம்மாவின் சரியான முகவரியைத் தெரிவிக்க இயலவில்லை. எனவே,கிருஷ்ணையா கங்கப்பாவின் சாதியைக் (கிராமங்களில் சாதியினால் வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளை(சேரி) குறிப்பாகக் கொண்டு) வைத்து அவரது வீட்டைக் கண்டுபிடித்துக் கொள்வதாக கூறினார்: “ஒருவேளை அவரது சாதியை வைத்து கோரன்ட்லா பகுதியில் உள்ள அவரது வீட்டைக் கண்டுபிடிக்கக்கூடும். ஆனால்,அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று எப்போதாவது உங்களுக்குச் சொன்னாரா?”

அனந்தபூரில் இருந்து ஏறத்தாழ 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோரன்ட்லா கிராமத்தின் வட்ட ஆய்வாளர் கிருஷ்ணையாவின் உறவினர். அதே கிராமத்தில்தான் கங்கப்பவின் மனைவி அஞ்சனம்மா தனது இளைய மகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மூத்த மகள் மற்றும் மீதமுள்ள ஒரே பிள்ளையும் கூட சில ஆண்டுகளுக்கும் முன்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கோரன்ட்லா பகுதியைச் சேர்ந்த காவலர் அஞ்சனம்மாவிடம் அவரது கணவரின் மரணம் குறித்து தெரிவித்திருக்கிறார். அவர் கங்கப்பாவின் உடலை டிசம்பர் 10 திங்கள்கிழமை மதிய வேளையில் பெற்றிருக்கிறார்.

அந்த தளர்ந்த முதியவரின் இறப்பிற்குக் காரணமான அந்தக் காரினை யாரும் அடையாளம் காணவில்லை.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Rahul M.

Rahul M. is an independent journalist based in Andhra Pradesh, and a 2017 PARI Fellow.

Other stories by Rahul M.
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan