“3 டிராக்டர்கள், 6 டிராக்டர் டிராலிகள் மற்றும் 2 முதல் 3 கார்கள் எங்கள் கிராமத்தில் இருந்து 24ம் தேதி காலை டெல்லிக்குச் செல்லும்“ என்று ஹரியானாவின் கந்த்ரவுளி கிராமத்தைச் சேர்ந்த சீக்கு தண்டா கூறினார். “28 வயது இளம் விவசாயியான அவர், “நாங்கள் டிராக்டர் பேரணியில் கலந்துகொள்ள செல்கிறோம். நான் எனது சொந்த டிராக்டரை ஓட்டிச்செல்கிறேன்“ என்று மேலும் கூறினார்.

ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள சிங்குவுக்கு செல்வது சீக்குவுக்கு இது ஆறாவது முறையாகும். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராடும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் ஒவ்வொரு முறை சென்றபோதும் கலந்துகொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள கந்த்ரவுளியில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கிறார். சாலையில் 4 மணி நேரம் பயணம் செய்து அங்கு செல்கிறார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஒவ்வொரு முறை சென்றபோதும், குறைந்தபட்சம் 3 இரவுகள் சிங்குவில் தங்கியுள்ளார்.

அவருடன் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் அவரது உறவினர் 22 வயதான மொஹிந்தர் தண்டாவும் செல்கிறார். அவர்களின் குடும்பம், விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள, ஹரியானாவின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கூட்டுக்குடும்பமாக உள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக 16 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அவர்கள் காய்கறிகள், கோதுமை மற்றும் நெல் பயிரிடுகிறார்கள்.

“எங்கள் விளைச்சலை வேளாண் விளைபொருள் சந்தை அங்காடியில் விற்பதன் மூலம் நாங்கள் ஏக்கருக்கு ஆண்டுக்கு,  ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றோம்“ என்று மொஹிந்தர் கூறினார். “பயிர் விளைவிப்பதற்கான செலவு ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. ஆனால், குறைந்தளவு ஆதரவு விலை உயரவில்லை“ என்று அவர் மேலும் கூறினார். இந்த வருமானமே அவரின் 8 பேர் கொண்ட குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இவர்களின் குடும்பத்தைப்போல், கந்த்ரவுளி கிராமத்தில் 1,314 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் ஜனவரி மாதத்தின் மத்தியில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது, கிராமத்தில் நிறைய விவசாயிகள் தொடர்பில் உள்ள பாரதிய விவசாயிகள் யூனியன் போல் மண்டல அளவில் அல்லாமல், உள்ளூர் அளவிலான முடிவுகளில் கவனம் செலுத்துகிறது. “இந்த கிராம குழு, விவசாயிகள் போராட்டத்திற்கு சென்றுள்ளவர்களின் வயலை யார் பார்த்துக்கொள்வது என்று முடிவெடுக்கிறது“ என்று சீக்கு கூறினார். அவர்களே சிங்குவில் உள்ளவர்களுக்கான உணவு தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள்.

Left: Cheeku Dhanda, on the way to Singhu border for the tractor rally on January 26. Right: A photo from Cheeku’s last trip to Singhu
PHOTO • Courtesy: Cheeku Dhanda
Left: Cheeku Dhanda, on the way to Singhu border for the tractor rally on January 26. Right: A photo from Cheeku’s last trip to Singhu
PHOTO • Cheeku Dhanda
Left: Cheeku Dhanda, on the way to Singhu border for the tractor rally on January 26. Right: A photo from Cheeku’s last trip to Singhu
PHOTO • Courtesy: Cheeku Dhanda

இடது: ஜனவரி 26ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வதற்காக சிங்கு நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். வலது: சீக்கு, கடந்த முறை சிங்குவிற்கு சென்றிருந்தபோது எடுத்த படம்

கந்த்ரவுளி இதுவரை போராட்டத்திற்கு ரூ.2 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. பணம் டெல்லியின் எல்லைகளுக்கு செல்லும் நபர்களிடம் கொடுத்தனுப்பப்படுகிறது என்று மொஹிந்தர் கூறினார். தலைநகரின் வெவ்வேறு போராட்ட இடங்களில் உள்ள சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஜனவரி 24ம் தேதி அன்று மற்றொரு ஒரு லட்ச ரூபாய் மற்றும் சமுதாய சமையலறைகளுக்கு தேவையான பருப்பு, சர்க்கரை, பால் மற்றும் கோதுமை போன்றவற்றை எடுத்துச்செல்லும் வாகனமும் சென்றது.

டெல்லியின் எல்லையில் பல்வேறு இடங்களில் நவம்பர் 26ம் தேதி முதல் விவசாயிகள் மூன்று வேளாண் திருத்தச்சட்டங்களை எதிர்த்து போராடி வருகிறார்கள். விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக  அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயத்தில் பெரும் சக்தியாக பெருவணிக நிறுவனங்கள் மாறுவதற்கு வழிவகுத்து தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று விவசாயிகள் பார்க்கிறார்கள். இந்த சட்டம் மேலும், விவசாயிகளுக்கு ஆதரவான குறைந்தளவு ஆதார விலை, வேளாண் விலைபொருள் சந்தை குழு மற்றும் மாநில கொள்முதல் உள்ளிட்ட அம்சங்களை பலவீனமாக்குகிறது. இந்த சட்டங்கள் அனைத்து இந்தியரையும் பாதிக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது. மேலும் disable the right to legal recourse இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 32 ஆன சட்ட உதவிபெறும் உரிமையை முடக்கி முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறது.

விவசாயிகள், ஜனவரி 26ம் தேதி, இதற்கு முன் நடந்திராத டிராக்டர் பேரணியை தலைநகரில் நடத்த திட்டமிட்டிருந்தனர். சீக்கு மற்றும் மொஹிந்தர் இருவரும் இந்த பேரணியில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். “இதற்கு தற்போது உள்ள நடைமுறை சிறப்பாக உள்ளது என அர்த்தம் கிடையாது. ஆனால், இந்த சட்டங்கள் மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும்“ என்று கோபமாக மொஹிந்தர் கூறுகிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Gagandeep

Gagandeep (he prefers to use only this name) is a first year student of Law at Kurukshetra University, Haryana.

Other stories by Gagandeep
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.