”மழை மீண்டும் நின்றுவிட்டது” என்று சொன்னபடி, ஒரு மூங்கில் கைத்தடியை ஊன்றிக் கொண்டு தனது விளைநிலத்தினூடாக நடக்கிறார் தர்மா கரேல். “ஜுன் என்பது வினோதமான மாதமாகிவிட்டது. 2-3 மணி நேரத்திற்கு மழை பெய்யும். சில நேரங்களில் தூறல் போடும், சில நேரங்களில் அடித்துப் பெய்யும். ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் தாங்க முடியாத வெப்பம் நிலவும். நிலத்தின் எல்லா ஈரப்பதத்தையும் அது உறிஞ்சிவிடும். மண் மீண்டும் காய்ந்துவிடும். பயிர்கள் எப்படி வளரும்?”
தானே மாவட்டத்தின் ஷஹாபூர் தாலுக்காவில் 15 வார்லி குடும்பத்தினர் வழிக்கும் பழங்குடியின் கிராமத்தைச் சேர்ந்த எண்பது வயதாகும் கரேலும் அவரது குடும்பத்தினரும் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். 2019 ஜுனில் அவர்கள் விதைத்திருந்த நெல் மணிகள் அனைத்தும் முழுமையாக காய்ந்துவிட்டன. அந்த மாதத்தின் 11 நாட்களில் வெறும் 393 மிமீ மழை மட்டுமே பெய்திருந்தது (சராசரி அளவான 421.9 மில்லிமீட்டரைவிட குறைவு).
அவர்கள் விதைத்திருந்த நெல்மணிகள் முளைக்கக்கூட இல்லை – அதனால் விதைகள், உரங்கள், டிராக்டர் வாடகை மற்றும் பிறவற்றுக்காக செலவு செய்த ரூ. 10,000 விரயமானது.
“ஆகஸ்ட் மாதத்தில் தான் வழக்கமாக பெய்த மழையின் காரணமாக நிலம் குளிர்ந்தது. இரண்டாவது விதைப்பின் மூலம்தான், கொஞ்சம் விளைச்சலும், சிறிது லாபமும் கிடைத்தது” என்கிறார் தர்மாவின் 38 வயதாகும் மகன் ராஜூ.
அந்த தாலுக்காவில் ஜுன் மாதத்தில் பொய்த்த மழையானது, ஜூலை மாதத்தில் வழக்கமான மழையளவான 947.3 மில்லிமீட்டரைக் காட்டிலும் அதிகமாக, 1586.8 மிமீ அளவிற்கு அடித்து பெய்தது. எனவே கரேல் குடும்பத்தினர் இரண்டாவது விதைப்புக்குத் தயாராகினர். ஆனால், ஆகஸ்ட் மாதத்திலும் மழை தீவிரமாகி, அக்டோபர் வரைக்கும் தொடர்ந்தது. தானே மாவட்டத்தின் ஏழு தாலுக்காவிலும் 116 நாட்களில் 1,200 மிமீ அளவிற்கு கூடுதலாக மழை பெய்தது.
“பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அளவில் செப்டம்பர் வரைக்கும் போதுமான மழை பெய்தது. மனிதர்களாகிய நாமே, வயிறு வெடிக்கும் வரை சாப்பிடும்போது, சின்னஞ்சிறு பயிர்கள் என்ன செய்யும்?” என்கிறார் ராஜூ. அக்டோபர் மாத மழையில் கரேலின் பண்ணையில் வெள்ளம் சூழ்ந்தது. “செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் நாங்கள் அறுவடையைத் தொடங்கி, நெல் மணிகளை மூட்டை கட்டத் தொடங்கியிருந்தோம்” என்கிறார் 35 வயதாகும் விவசாயியும் ராஜூவின் மனைவியுமான சவிதா. ”இன்னும் கொஞ்சம் அறுவடை செய்ய வேண்டியிருந்தது. அக்டோபர் 5க்குப் பிறகு, திடீரென மழை அதிகமாகிவிட்டது. நாங்கள் முடிந்தவரையில் நெல் மூட்டைகளை வீட்டிற்குள் கொண்டுவந்து அடுக்க முயற்சித்தோம். ஆனால், சில நிமிடங்களுக்குள் பண்ணையில் வெள்ளம் சூழ்ந்துவிட்டது…”
ஆகஸ்ட் மாதத்தில் செய்த இரண்டாவது விதைப்பின் மூலம், கரேலுக்கு 3 குவிண்டால் அரிசி கிடைத்தது. கடந்த காலங்களில் அவருக்கு முதல் விதைப்பிலேயே ஏறத்தாழ 8-9 குவிண்டால் அரிசி கிடைத்தது.












