ஊடகமெங்கும் விரிசல்கள்தான். சமோலி மாவட்டத்தின் மலையில் உள்ள டவுன் குலைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரிப்பதை அவள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியில் தெரிந்து கொள்கிறாள். ஊடக நிருபர்கள்  விரிசல்களை பார்க்க கிராமத்தில் நிரம்புகின்றனர். டவுன்களில் நடக்கும் போராட்டங்களுக்கும் செல்கின்றனர். கடந்த வாரம் வீடுகளை விட்டு மக்களை கிளம்ப சொன்னபோது அவள் தன் சிறு வீட்டை விட்டு கிளம்ப மறுத்துவிட்டாள். அவர்கள் அவளை வெளியே அனுப்ப முயலட்டும். அவள் அஞ்சவில்லை.

விரிசல்கள் அந்த கிராமத்துக்குள் நுழைந்திருக்கும் விந்தையான பேராசையின் அடையாளமாக அவள் நினைக்கிறாள். மலைகளுக்குள் புகுந்து கொண்டிருக்கும் புது திட்டங்களும் சாலைகளும் மட்டும் படையெடுப்புகள் அல்ல. அவையன்றி வேறொன்றும் இருக்கிறது. ஆழமாக சமூகத்தை ஊடுருவியிருக்கும் அது, இவ்வுலகின் தீமை ஆகும். பிளவு ஏற்கனவே நேர்ந்துவிட்டது. அவர்கள் இயற்கையுடன் துண்டித்துக் கொண்டார்கள். மலைக்கொடியிலிருந்து தொங்கும் புதுக் கனவை விரட்டிக் கொண்டிருப்பதால், பூமியின் கடவுளிடமிருந்து தொடர்பறுத்துக் கொண்டனர். அக்கொடி மாயம் நிறைந்தது. அந்த மாயத்தை பின்தொடர்வதில் யாரை குற்றம் சொல்ல முடியும்?

பிரதிஷ்தா பாண்டியா கவிதை பாடுவதை கேளுங்கள்

PHOTO • Labani Jangi

விரிசல்கள்

ஒருநாளில் நடந்துவிடவில்லை.
நுட்பமான, மயிரளவு பிளவுகள்
அவளது முடியின் தொடக்ககால நரையாக
கண்களுக்கடியில் இருக்கும் சுருக்கமாக
மறைந்திருந்தது.
கிராமம், மலைகள், காடுகள், ஆறுகள்
இடையே இருக்கும் சிறு பிளவுகள்
தூரத்தால் பிழைத்தன.
பெரிய விரிசல்கள் லேசாகவும் மெதுவாகவும்
உறுதியாகவும் புலப்படத் தொடங்கியதும்
ஒரு சிறு சுவர்
கொஞ்சம் பூச்சு அங்கே
என குழந்தைகள் பெறுவதைப் போல
எதுவும் குலைந்து விடாமல் அவற்றை
சரி செய்து விட முடியுமென நினைத்தாள்

ஆனால் பிறகுதான் பெரிய அளவில் தோன்றி
அவளது முகத்தை நோக்கி
கண்ணாடி போன்ற சுவர்களின் வழியாக
தளராமல் மன்னிக்காமல் அப்பட்டமாக
அவை முறைத்தன
நரசிம்மரின் கண்களைப் போல்

அவற்றின் வடிவங்களும் திசைகளும் அவளுக்கு தெரியும்
கிடைமட்டம், செங்குத்து, படிநிலை
செங்கற்களுக்கு இடையிலிருக்கும் வெளிகள்
அவை வளரும் சிறந்த இடங்கள்
செங்கல் ஒட்டப்பட்ட இடங்கள்
அடித்தள சுவர்கள்
விரைவில் ஜோஷிமாத்தையும் அவை தாண்டும்
மலைகள் தாண்டி, தேசம் கடந்து தெருக்கள்தோறும்
தாக்கப்பட்ட அவளது கால்களையும் ஆன்மாவையும் கடந்து
காலடி நிலத்துக்கும் கீழே
அவை தொற்று போல் பரவுவதை அவள் பார்த்தாள்

கிளம்பும் காலம் தாண்டிவிட்டது
எங்கும் செல்ல முடியாது
கடவுளர் மேலேறி சென்றுவிட்டனர்

பிரார்த்திக்கும் காலமும் கடந்து விட்டது
பழைய நம்பிக்கைகளை பற்றியிருக்கும் காலமும் தாண்டிவிட்டது
எதையும் பாதுகாக்கும் நிலையும் இல்லை
சூரியவெளிச்சத்தில் விரிசல்களை நிரப்புவதும் வீண்
வெடிக்கும் இந்த இருள்
உருக்கப்பட்ட சாளக்கிராமக் கல் போல
அறியாக் கோபத்துடன், ஆழ வேரூன்றிய வெறுப்புடன்
எல்லாவற்றையும் விழுங்குகிறது.

அவள் வீட்டு பின்னால் இருக்கும் பள்ளத்தாக்கில்
சபிக்கப்பட்ட பீன்ஸை யார் எறிந்தது?
அவள் நினைவுகூர முயற்சித்தாள்
அல்லது வானில் வேரைக் கொண்டிருக்கும்
இக்கொடியை பூச்சிகள் பிடித்துக் கொண்டனவா?
இந்த விஷக்கொடியின் உச்சி அரண்மனையில் யாரிருப்பார்?
அரக்கனை சந்தித்தால் அவளால் அடையாளம் காண முடியுமா?
அப்போதும் அவள் கைகளில்
கோடரி தூக்கும் வலு இருக்குமா?
மீட்சிக்கு எங்கு தேட வேண்டும்?
சோர்வுற்று அவள் மீண்டும் தூங்க முயன்றாள்
கண்கள் அகல திறந்து
மேலும் கீழும் பார்த்து
கனவு போன்ற மயக்க நிலையில்
மாய பீன்ஸ் தண்டுகள்
பழைய சுவர்களில் முளைக்கையில்

தமிழில் : ராஜசங்கீதன்

Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Illustration : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan