ஒரு நாள் பிற்பகல் மஜௌலி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்திருக்கும் சுகலோ கோண்டு, "எங்கள் சமூகங்களை வெளியேற்றுவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடுவதற்காக மார்ச் 5 ஆம் தேதி ராபர்ட்ஸ்கஞ்சில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்திற்கு நாங்கள் சென்றோம்", என்று நகைச்சுவையாக கூறுகிறார்.

வன உரிமைகள் சட்டத்தின் (FRA) செல்லுபடியை எதிர்த்து வன விலங்கு பாதுகாப்பு குழுக்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இந்தியாவில் 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான ஆதிவாசிகளை வெளியேற்றுமாறு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட FRA வன சமூகங்களுக்கு அவர்களின் பாரம்பரிய நிலங்களுக்கான உரிமைகளை வழங்குவதையும், அவர்கள் எதிர்கொண்ட வரலாற்று ரீதியான சமூக அநீதிகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்வது முக்கியமானது", என்று தனது பேரக்குழந்தைகளால் சூழப்பட்டுள்ள சுகலோ கூறுகிறார். "நாம் ஒருவருக்கு ஒருவர் மற்றும் காட்டில் வாழும் பிற அனைத்து சமூகத்தினருடனும் சேர்ந்து நிற்க வேண்டும். (மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து) உச்ச நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், எங்கள் உரிமைகளை கேட்பதற்கு நாங்கள் அஞ்சவில்லை என்பதை ஆட்சியாளர்களுக்கு நாங்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்", என்று கூறி அவர் புன்னகைக்கிறார். நாங்கள் சுமார் 30 பேர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தோம், ஆனால் அவர் கோபம் அடையவில்லை  அல்லது எங்களை வெளியேறச் சொல்லவுமில்லை. திரும்பி வந்து அவருடன் பேசச் சொன்னார். அவர் புதியவர் என்பதால் இப்படி செய்திருக்கலாம்", என்று கூறினார்.

நான் முதன் முதலில்  சுகலோ கோண்டு அவர்களை 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திரப் பிரதேசத்தின் ராபர்ட்ஸ்கஞ்சில் உள்ள அகில இந்திய வனத் தொழிலாளர்கள் சங்கத்தின் அலுவலகத்தில் சந்தித்தேன் (காண்க: 'நான் அன்று சிறைக்குச் செல்வேன் என்று எனக்குத் தெரியும்') . AIUFWP (வன மக்கள் மற்றும் வன தொழிலாளர்களின் தேசிய மன்றம் என்ற பெயரில் 1996 இல் முதலில் துவங்கப்பட்டது) 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.  இது 15 மாநிலங்களில் சுமார் 1,50,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் சுமார் 10,000 உறுப்பினர்களுடன் 18 மாவட்டங்களில் இத்தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு, இந்தியாவில் 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான ஆதிவாசிகளை வெளியேற்றும்

காணொளியில் காண்க: நாங்கள் இந்த நிலத்தின் மக்கள், இந்த நிலத்தை விட்டு நாங்கள் செல்ல மாட்டோம்

தற்போது தனது 50 களில் இருக்கும் சுகலோ போராட்டத்திற்கு அந்நியமானவர் அல்ல. அவர் 2006 ஆம் ஆண்டு இச்சங்கத்தில் சேர்ந்தார், பின்னர் அதன் பொருளாளராகவும் ஆனார். சமூகங்களின் நில உரிமைகளைக் கோர FRA வைப் பயன்படுத்தப் படுவதைக் காண்பதே இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள்களுள் ஒன்றாகும்.

2015 ஆம் ஆண்டு மாதம் இம்மாநிலத்தில் கன்ஹார் நீர் பாசனத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக சுகலோ ஒரு மாதத்திற்கும் மேலாக சிறைக்குச் சென்றார். 2018 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி, தனது 30 களில் இருக்கும் கிஸ்மத் கோண்டு மற்றும் தனது 50 களில் இருக்கும் சுக்தேவ் கோண்டு ஆகியோருடன் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் அனைவருமே இச்சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கோண்டு ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். வனத்துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் லக்னோவில் இருந்து திரும்பி வரும் வழியில் சோபன் ரயில் நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன இதில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 504 இன் கீழும் (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு தூண்டிவிடுதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாளின் முடிவில் சுகலோ மற்றும் கிஸ்மத் ஆகியோர் மிர்சாபூரில் உள்ள சிறைச் சாலைக்கும், சுக்தேவ் சோன்பத்ராவில் உள்ள சிறைச் சாலைக்கும் அனுப்பப்பட்டனர். கிஸ்மத் மற்றும் சுக்தேவ் ஆகியோர் செப்டம்பர் மாதமே வெளியில் விடுவிக்கப்பட்டனர், ஆனால் சுகலோ 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே வெளியில் விடுவிக்கப்பட்டார்.

இந்த முறை சிறை வேறு மாதிரியாக இருந்தது. என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் கோபமாக இருந்தேன். நான் முழுவதும் கோபமாக இருந்தேன், எனது முழு உடலும் கோபத்தில் மூழ்கியிருந்தது. நான் ஒரு பொதுவான குற்றவாளியைப் போல நடத்த பட்டேன்! அவை அனைத்தும் பொய்யான வழக்குகள். எங்களை பயமுறுத்த விரும்பியே காவல்துறை இத்தகைய செயலை செய்துள்ளது என்று எனக்கு நன்கு தெரியும். நான் சட்டப்பூர்வமான வழிகளின் மூலம் தான் எனது உரிமைகளுக்காகப் போராடுகிறேன் - அதில் தவறு என்ன இருக்கிறது? நான் சிறையில் உணவை சாப்பிட மறுத்து விட்டேன். எனது நண்பர்கள் வருகைதரும் போது கொடுக்கும் பழங்கள் மற்றும் தின்பண்டங்களைக் கொண்டே உயிர் வாழ்ந்தேன்", என்று கூறினார்.

அப்போது தான், சுக்தேவ் மற்றும் கிஸ்மத் ஆகியோர் ஐந்து நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட தங்களது சகாவான நந்து கோண்டைப் பற்றி விவாதிக்க சுகலோ வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் எந்த காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று கூறி, அவரைப் பற்றி கவலைப்பட்டனர். FRA வைப் பயன்படுத்த சமூகத்தில் உள்ளவர்களை தூண்ட முயற்சித்த காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். யாரை அழைப்பது, ஏராளமான மக்களை தொடர்பு கொள்வதற்கு 'தொலைபேசி மரம்' அமைப்பது எப்படி, மேலும் அவர்கள் தொடர்ந்து ஏன் இந்தப் பிரச்சினையில் இருக்க வேண்டும் என்பது குறித்தும் சுகலோ அவர்களுக்கு பரிந்துரைகளை வழங்கினார். (பின்னர் நந்து கோண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்).

Left to right: Sukhdev, Sukalo, and Keesmat
PHOTO • Sweta Daga
Sukalo making phone calls to other community members
PHOTO • Sweta Daga

இடது: அகில இந்திய வன தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்: சுக்தேவ், சுகலோ மற்றும் கிஸ்மத் மற்றும் வலது: சுகலோ (வலது) மற்ற சமூக உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்புகள் செய்து கொண்டிருக்கிறார்

சிறையில் இருப்பது எவ்வளவு பயமாக இருந்தது என்பது குறித்து சுகதேவ் பேசுகிறார். "நாங்கள் கைது செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் இச்சங்கத்தில் சேர்ந்தோம். நான் தாக்கப்படுவேன் என்று எண்ணி பயந்தேன், ஏனெனில் அப்படித் தான் மற்ற கிராமவாசிகள் எங்களிடம் கதைகளைக் கூறி வைத்திருக்கின்றனர். எங்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை", என்று கூறினார்.

கிஸ்மத் கூறுகையில் சுகலோவும் அவருடன் இருந்ததால் அவருக்கு சுலபமாக இருந்தது என்றும், ஆனால் அவரது குழந்தைகளை பிறந்து அவர் தவித்தார் என்றும் கூறினார். என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் சுகலோ அக்கா அமைதியாக இருந்தார், மேலும் நாங்களும் அவ்வாறே செய்தோம். நாங்கள் எப்போதாவது சிறையிலிருந்து வெளியே வருவோமா? அவர்கள் எவ்வளவு காலம் எங்களை இங்கேயே வைத்திருப்பார்கள்? என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன் என்று கூறினார்.

அவர்கள் நந்துவைத் தொடர்பு கொண்டு அவரைப் பற்றி தெரிந்து கொண்ட பின்னர் அங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவு செய்திருந்தனர். சுகலோ தனது பெரும்பாலான நேரத்தை தொலைபேசியில் செலவிடுவதையும், சங்க உறுப்பினர்களை ஒருங்கிணைக்க முயற்சிப்பதையும், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதையும், ஆதரவு வழங்குவதையும், நான் கவனித்தேன். இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதார் அட்டையை பெறுவதற்கோ அல்லது குடும்ப அட்டையை பெறுவதற்கும் கூட இவரை அணுகுகின்றனர்.

தனது வீட்டையும் குடும்பத்தையும் நிர்வகிக்க முயற்சிப்பதோடு மட்டுமல்லாமல் அத்துடன் போராட்ட வேலைகளையும் கவனிப்பதால், இது சோர்வை தரலாம் என்று சுகலோ கூறுகிறார். "ஆனால் சங்கத்தின் பணிகள் முடிக்கப்பட்ட வேண்டும்", என்று கூறுகிறார். "இப்போது நான் அதிகம் பயணம் செய்கிறேன் மேலும் அது எனது குழந்தைகளைப் பற்றி என்னை கவலை கொள்ளச் செய்கிறது", என்று கூறினார்.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று, வன உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிவாசி குடும்பங்கள் கூறிய கூற்றுகள் குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்கும்படி கோரி, மனு உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இது ஒரு குறுகிய கால அவகாசத்தை எங்களுக்கு வழங்கியது.

ஜூன் 24 ஆம் தேதி புதன்கிழமை அன்று வெளியேற்றப்பட வேண்டிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு அமர திட்டமிட்டிருக்கிறது.

முன்னோக்கி செல்ல வேண்டிய பாதை நீளமானது, என்று சுகலோவுக்குத் தெரியும். நாங்களே பழங்களைச் சாப்பிட மரங்களை நடுவது போல் இல்லை இது. எங்கள் உழைப்பின் பலனை சாப்பிட போகிறவர்கள் இனிமேல் தான் வர இருக்கிறார்கள். அவர்கள் என் பேரக்குழந்தைகள் மேலும் நான் அவர்களுக்காக தான் இந்த வேலையைச் செய்கிறேன்", என்று கூறினார்.

தமிழில்: சோனியா போஸ்

Sweta Daga

Sweta Daga is a Bengaluru-based writer and photographer, and a 2015 PARI fellow. She works across multimedia platforms and writes on climate change, gender and social inequality.

Other stories by Sweta Daga
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose