1952ஆம் ஆண்டு இச்சட்டத்தை இந்திய அரச திரும்பப் பெற்றது. பழங்குடியினர் ‘குறியிடப்பட்டனர்.’ அவர்களில் சிலர் தாழ்த்தப்பட்டோர் என்றும், சிலர் பழங்குடியினர் என்றும், சிலர் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் இப்போது சேர்க்கப்பட்டனர்.
2011 கணக்கெடுப்பின்படி சுமார் 223,527 பார்தீகள் மகாராஷ்டிராவில் வசிக்கின்றனர். சிலர் சத்திஸ்கர், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசத்திலும் வசிக்கின்றனர். பார்தீகளுக்குள் பல்வேறு துணை குழுக்கள் அவர்களின் தொழில்கள் அல்லது மற்ற விளக்கங்களுக்கு ஏற்ப பெயரிடப்பட்டுள்ளனர். பல் பார்தீகள் (கொட்டகைகளில் வசித்தவர்கள்), பில் பார்தீகள் (துப்பாக்கிகளை பயன்படுத்தியவர்கள்), பன்சே பார்தீகள் (சுருக்கு கொண்டு வேட்டையாடியவர்கள்) உள்ளிட்டோரும் அதில் அடங்கும்.
சீர்மரபினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தால் பட்டியிலடப்பட்ட இந்தியாவில் உள்ள சுமார் 1500 நாடோடி மற்றும் நாடோடி பழங்குடி சமூகங்கள் மற்றும் 198 சீர் மரபினர் சமூகங்களில் பார்தீகள்தான் கல்வி, வேலைவாய்ப்பு, பிற வசதிகளில் பின்தங்கியுள்ளனர். இப்போதும் அவர்கள் குற்றவாளிகளாக, அவமதிக்கப்படுகின்றனர்.
“நாங்கள் இப்போதும் குற்றவாளிகள் என முத்திரையிடப்பட்டுள்ளோம்,” என்கிறார் சுனிதா. “கிராமத்தில் எந்த குற்றம் நடந்தாலும், காவல்துறையினர் பொதுவாக பார்தீகளை குற்றஞ்சாட்டுவர், அவர்கள் எளிய இலக்கு. அதேப்போன்று அவர்களுக்கு [பார்திகளுக்கு] எதிரான அராஜகங்களும் தீவிரமானது. இப்போதும் தொடர்வதை நீங்கள் பார்க்கலாம். எங்களுக்கு எதிரான இந்த அவமானம் முடிவுக்கு வர வேண்டும்.”
பார்தீகளின் உரிமைகளுக்காகப் போராடுபவராக சுனிதா மாறியுள்ளார். ஆனால் அவருக்கு இது ஒரு நெடிய பயணம்.
6ஆம் வகுப்பு வரை படித்த புனே மாவட்டம், ஷிருர் தாலுக்காவின் அம்பாலி கிராமத்தில் உள்ள சில்லா பரிஷத் பள்ளியில் அவரும் அவமானங்களைச் சந்தித்துள்ளார். “என் சமூகம் காரணமாக நிறைய கேலி செய்யப்பட்டுள்ளேன். அவர்கள் ஏன் எனக்கு இப்படி செய்கிறார்கள் என ஆச்சரியப்பட்டதுண்டு?”
சுனிதாவின் தந்தை ஏக்நாத் அவ்வப்போது பல்லிகள், காட்டுக்கோழிகள், முயல்கள், பிற சிறிய விலங்குகளை உணவிற்காக வேட்டையாடினார். அவரது தாயார் ஷாந்தாபா தனது மூத்த மகளுடன் உணவிற்கு யாசகம் பெற்றார். அவர்களின் இளைய தம்பி அவினாஷ் வீட்டிலேயே இருந்துள்ளான். “நாங்கள் அடிக்கடி பட்டினி கிடந்திருக்கிறோம்,” என்கிறார் அவர். “பள்ளியில் பால் கிடைக்கும், எனக்கு நினைவிருக்கிறது. வீட்டில் உண்ண எதுவும் இருக்காது என்பதால் நான் அதை வயிறு முட்ட குடிப்பேன். எனது ஆசிரியர் மிகவும் நல்லவர். நான் விரும்பும் அளவு பாலை எடுத்துக் கொள்ளச் செய்வார். அவருக்கு பார்தீகளின் நிலை தெரியும். நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு யாசகம் பெற்று வரும் உணவு போதாது. நாங்கள் அரிதாகவே ரொட்டியை கண்டோம்.”