ஆடுகள் காட்டில்தான் இருந்தன என்பது பிரச்சினையில்லை. ஓநாய்கள் மற்றும் புலிகள் வருவதற்கு முன்பிருந்தே அவர்கள் பூர்வீகக் குடிளாக இருந்தாலும் அல்லது வேறு இடங்களில் தோன்றியவையாக இருந்தாலும், தங்குமிடம் தேடி இங்கு வந்தவர்களாய் இருந்தாலும் கூட பெரிய பிரச்சினை இல்லை. அவை காட்டுவாசிகள், அவ்வளவுதான்.

காட்டின்  குறைவான வளங்களுக்காகப் பூர்வீக விலங்கினங்களுடன் போட்டியிடும் ஆபத்து, மற்ற தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்துகிறது. பழமையான நிலப்பரப்பை மாசுபடுத்துகிறது; அழிக்கிறது. நோய்களை பரப்புபவை அவைதான். எல்லாவற்றுக்கும் மேலாக, அவை சந்தேகத்திற்கிடமான வம்சாவளியைச் சேர்ந்தவை. வம்சாவளியின் பதிவு செய்யப்பட்ட சான்றுகள் எதுவும் இல்லை. அவை பல ஆண்டுகளாக அபகரித்து வந்த நிலத்திற்கு உண்மையான உரிமையும் இல்லை. காட்டிலிருந்து அவை இப்போது விரட்டப்பட வேண்டும். அவற்றை முகாம்களில் வைப்பது போதவில்லை, சிறைக்குள்ளும் தள்ள வேண்டும். வரலாற்றிலிருந்து தவிர்ப்பது மட்டும் போதாது. கட்டாயப்படுத்தி அவை வெளியேற்றப்பட வேண்டும். எங்கிருந்து வந்தனவோ அங்கே திரும்ப அனுப்பப்பட வேண்டும். பட்டியல்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு காட்டு விலங்கும் அதன் வசிப்பிடத்திலிருந்து வெளியே இழுத்து வரப்பட வேண்டும். கத்தும் கூட்டத்தை நாடு கடத்தி சத்தமில்லாமல் ஆக்க வேண்டும். எதிர்காலத்திலும் எவரும் அத்துமீறி நுழைந்துவிடாமல் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

காட்டின் புதிய அரசு, கத்திச்சுருள் கொண்ட முட்கம்பி வேலிகளைப் போடும் உறுதியுடன் துரித வேகத்தில் செயல்பட்டு வருகிறது. வெறுப்பு நிரம்பியக் காற்றைக் கிழிக்கும் துருப்பிடிக்காத கம்பிச் சுருள்கள் விரைவிலேயே காட்டைச் சுற்றி அமைக்கப்பெற்றது. சுருள் கத்திக் கம்பிகளில் சிக்கிக் காயம்பட்டு உடலுறுப்புகளை பறிகொடுத்துக் கதறும் ‘மே… மே…’ என்னும் சத்தம் இனி கேட்கும். தாய் மதம் திரும்புவதற்கான வேண்டுகோள் போல அது ஒலிக்கும். இருளும் வானில் மறையும் சிவந்த சூரியனைப் போல் அது இருக்கும்.

அன்ஷு மாளவியா இந்த கவிதையை இந்தியில் வாசிப்பதை கேளுங்கள்

ஆங்கிலத்தில் பிரதிஷ்தா பாண்டியா கவிதை வாசிப்பதைக் கேளுங்கள்

தாய் மதம் திரும்புவதற்கான வேண்டுகோள்

ஓ தீர்மானகரமான தேசியவாதியே!
என்னுடைய வீட்டுக்கு திரும்ப தயவுசெய்து ஏற்பாடு செய்!

வீடோ பூர்வீகமோ
பூர்விக மதமோ பூர்வீக நாடோ
பூர்வீக பண்பாடோ மூலமோ கருப்பையோ
என்ன பெயர் சொல்லி அழைப்பீர்களோ தெரியாது
எங்களின் வேர்களுக்கு திரும்பும் உரிமை எங்களுக்கு உண்டு
மக்களும் அவர்தம் வேர்களுக்கு திரும்ப உதவ
வேண்டுகிறோம்

ஓ விஷ்ணு! ஓ பிரம்மா
ஓளிரும் ஜோதிலிங்கத்தின்
பூர்வீகத்தை நீங்கள் தேடி
அதன் முடிவை கண்டடைய வேண்டும்
என்னுடைய வீட்டுக்கும் திரும்பும் வழி காட்டு
பிடிவாதமான தேசியவாதியே!

‘வசுதேவ குடும்பகம்’ என்ற பெயரில்
மியான்மரை விட்டு நீங்கள் ரோகிங்கியாக்களை விரட்டியது போல்
பங்களாதேஷிகளும் பங்களாதேஷுக்கு அனுப்பப்படுவார்கள்
இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள்
அல்ஜீரியர்கள் பிரான்ஸை விட்டு வெளியேற வேண்டியிருப்பதைப் போல்
ரோமாக்களும் ஜெர்மனிக்கு திரும்ப அனுப்பப்படுவார்கள்
வெள்ளை அமெரிக்கர்கள் அமெரிக்காவிலுருந்து
ஐரோப்பாவுக்கு அனுப்ப வேண்டியது போல்
மொரீஷியஸ், சுரினாம் போன்ற எல்லா பகுதிகளின்
இந்துக்களும் புனித பூமிக்கு திரும்புவார்கள்.
பூர்விகத் தாயைத் தேடி
நாமும் ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டியது போல்
மும்பையிலிருந்தும் அகமதாபாத்திலிருந்தும்
பையாக்கள் திரும்ப வேண்டியது போல்
குஜராத்திகள் தில்லியிலிருந்து திரும்ப வேண்டியது போல்
பழங்குடிகள் காடுகளுக்கு திரும்புவது போல் (அடடா!
மன்னிக்கவும். அரசுக்கு காடுகள் தேவையென நினைக்கிறேன்!)
தயவுசெய்து எனக்கு என் வீட்டை திரும்பக் கொடுங்கள்

நான் மட்டும் ஏன்
நீங்களும் கூட வர வேண்டு - நாம் அனைவரும் செல்ல வேண்டும்
திரும்பிப் போ.. திரும்பு…
நம் வீடுகளைத் தேடி
நான்கு கால்களில் நடந்து
மரங்களில் ஏறி, சேற்றில் மூழ்கி,
இலைகளில் மறைந்து
புழுக்களைப் போல் சுயமாய் உறவு கொண்டு
செவுள்கள் கொண்டு சுவாசிக்கும் மீன்களைப் போல்
அனைவரும் திரும்புவோம்

ஒரு செல் புழுக்களாகி
பூர்விகக் கடலுக்குள் சென்று
ஆதி மனநிலையில்
மேய்ந்து திரிவோம்…

ஆனந்தமான கடவுளின் இருப்பில்
உடலை மூடும் திரையைக் கைவிடுவோம் - அனைவரும் ஒன்றாவோம்
யதார்த்தத்திலில்லா மரபணுவைத் தேடி
பூர்விகத்துக்கும் வரலாற்றுக்கு முந்தைய வீட்டுக்கும் மெய்யான மூலத்துக்கும்
திரும்பும் இந்த பெரும் ஊர்வலத்தில்
இந்த ஆன்மிக பெரும் பரிசோதனையில்
படபடக்கும் மதக்கொடிகளுடன், போர் முரசுகளுடன்
ஆரவாரமாக, கிளர்ச்சியாக
நாம் கருந்துளைக்கு திரும்புவோம்.
மனித குலம் அதன் முடிவுக்கு பெருவெடிப்புடன் சேரட்டும்
மூலத்துடன் மீண்டும் இணையட்டும்.
உண்மையான கூட்டுத் தற்கொலைக்கு
நாம் முன்னேறிச் செல்வோம்
ஓ யதார்த்தத்தை மீறிய தேசியவாதியே!


அருஞ்சொல் விளக்கம்

தாய் மதம் திரும்புதல்: ‘வீடு திரும்புதல்’ என அர்த்தம் தொனிக்கும் இந்தி வார்த்தையை பயன்படுத்தி கிறித்துவர்களையும் இஸ்லாமியர்களையும் இந்து மதத்துக்கு திரும்ப அடிப்படைவாத இயக்கங்கள் நடத்திய பிரசாரம்

ஜோதிலிங்கம்: கடவுள் சிவனின் அடையாளம்

வசுதேவ குடும்பகம்: ‘உலகம் மொத்தமும் என் குடும்பம்’

தமிழில் : ராஜசங்கீதன்

Poem and Text : Anshu Malviya

Anshu Malviya is a Hindi poet with three published collections of poems. He is based in Allahabad and is also a social and cultural activist, who works with the urban poor and informal sector workers, and on composite heritage.

Other stories by Anshu Malviya
Illustrations : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan