இந்த தீபாவளிக்கு 10,000-லிருந்து 12,000 விளக்குகள் வரை தயாரித்திருப்பதாக ஸ்ரீகாகுளம் பரதேசம் சொல்கிறார். இந்த வாரம் கொண்டாடப்படும் தீபாவளிக்காக, ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே 92 வயது குயவர் வேலை செய்யத் தொடங்கி விட்டார். ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு தேநீர் அருந்திவிட்டு வேலையைத் தொடங்குவார். சில இடைவேளைகள் மட்டும் எடுத்துக் கொண்டு இரவு வரை தொடர்வார்.
சில வாரங்களுக்கு முன் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், சிறு பீடத்துடனான விளக்கு செய்ய முயற்சித்தார் பரதேசம். “இவை உருவாக்குவது சற்று கஷ்டமான வேலை. பீடத்தின் தடிமன் சரியாகக் கிடைக்க வேண்டும்,” என்கிறார் அவர். குவளை வடிவ விளக்கில் எண்ணெய் நிரப்பப்படுகையில், கவிழாமல் தடுக்க பீடம் உதவுகிறது. திரி அணையாமலும் பாதுகாக்கிறது. வழக்கமான விளக்கு செய்ய இரு நிமிடங்கள் போதும். பீடத்துடனான விளக்கு செய்ய ஐந்து நிமிடங்கள் அவருக்கு ஆகிறது. வாடிக்கையாளர்களை இழந்துவிடக் கூடாது என்பதால் வழக்கமான விளக்கின் விலை 3 ரூபாயிலிருந்து 1 ரூபாய் மட்டும் கூட்டி பீட விளக்கை விற்கிறார்.
கலையில் பரதேசம் கொண்டிருகும் உற்சாகமும் பற்றும் அவரது வாழ்க்கைச் சக்கரத்தை விசாகப்பட்டினத்தின் கும்மாரி வீதியில் (குயவர் தெரு) எண்பது ஆண்டுகள் தடையின்றி சுற்ற வைத்திருக்கிறது. லட்சக்கணக்கானோரின் வீடுகளில் தீபாவளிக்கு ஒளியூட்டும் விளக்குகளை இந்த காலத்தில் அவர் செய்திருக்கிறார். “உருவமற்ற களிமண் நம் கை, ஆற்றல் மற்றும் சக்கரம் ஆகியவற்றின் துணையுடன் ஒரு பொருளாக மாறுகிறது. அது கலை,” என்கிறார் 90 வயதுகளில் இருக்கும் அவர். குடும்பத்துடன் வாழும் அவர் அதிகமாக வெளியே செல்வதில்லை. கேட்கும்திறன் சற்று குறைவு அவருக்கு.
விசாகப்பட்டினத்தின் அக்கய்யாபாலெத்தில் பரபரப்பாக இயங்கும் சந்தைப் பகுதிக்கு அருகே இருக்கும் குறுகலான சந்துதான் கும்மாரி வீதி. அத்தெருவில் வசிக்கும் பெரும்பான்மையானோர் கும்மாராக்கள் ஆவர். சிலைகள் உள்ளிட்ட களிமண் பொருட்களை பாரம்பரியமாக செய்து வரும் சமூகம் அவர்கள். விசாகப்பட்டின மாவட்டத்தின் பத்மநாபன் மண்டலத்திலிருந்த போட்னுரு கிராமத்திலிருந்து வேலை தேடி பரதேசத்தின் தாத்தா இந்த நகரத்துக்கு இடம்பெயர்ந்தார். அவர் இளமைக்காலத்தை நினைவுகூருகிறார். இத்தெருவில் இருந்த 30 கும்மாரக் குடும்பங்கள் விளக்குகளையும் செடிகளுக்கான பானைகளையும் உண்டியல்களையும், மண் குடுவைகளையும் குவளைகளையும் சிலைகள் போன்ற பிற மண்பொருட்களையும் செய்தனர்.
விசாகப்பட்டினத்தின் குயவர்கள் வசிக்கும் ஒரே பகுதியாக கருதப்படும் இடத்தில் விளக்குகள் செய்யும் கடைசி கைவினைஞராக பரதேசம் இருக்கிறார். பிற குயவர் குடும்பங்கள் சிலைகள் மற்றும் பிற களிமண் பொருட்கள் செய்யத் தொடங்கினர். அல்லது முற்றிலுமாக கலையைக் கைவிட்டனர். பத்து வருடங்களுக்கு முன்வரை, அவரும் விழாக்களுக்கு சிலைகள் செய்து கொண்டிருந்தார். பிறகு மெல்ல அதை நிறுத்தினார். சிலை செய்வது உடலை வருத்தி செய்ய வேண்டிய வேலை. பல மணி நேரங்களாக தரையில் உட்கார்ந்து செய்வது கஷ்டமாக இருப்பதாக அவர் சொல்கிறார்.













