”ஒரு வருடத்தில் நாங்கள் பல விலங்குகளை சிறுத்தைகளுக்கு பறிகொடுக்கிறோம். இரவில் அவை வந்து தூக்கிச் சென்று விடுகின்றன,” என்கிறார் மேய்ப்பர் கவுர் சிங் தாகூர். பூட்டியா வகை நாட்டு நாயான ஷெரூ கூட அவற்றை விரட்ட முடிவதில்லை என்கிறார் அவர்.
இமயமலையின் கங்கோத்ரி தொடரின் ஒரு மலையின் உச்சியில் நின்று அவர் நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் மேய்க்கும் மந்தைகள், உத்தர்காசி மாவட்டத்தின் சவுரா கிராமத்திலும் சுற்றியும் வசிக்கும் ஏழு குடும்பங்களுக்கு சொந்தமானவை. 2,000 மீட்டர்களுக்கு கீழே இருக்கும் அதே கிராமத்தில்தான் கவுர் சிங்கும் வசிக்கிறார். வருடத்தின் ஒன்பது மாதங்களுக்கு அந்த விலங்குகளை பார்த்துக் கொள்ளும் ஒப்பந்தத்தில் அவர் இருக்கிறார். மழையோ பனியோ அவர் வெளியே சென்று மேய்த்து விலங்குகளை எண்ணி சரி பார்த்து மீண்டும் கொண்டு வர வேண்டும்.
“சுமாராக ஒரு 400 செம்மறிகளும் 100 ஆடுகளும் இங்கு இருக்கின்றன,” என்கிறார் மற்றொரு மேய்ப்பரான ஹர்தேவ் சிங். 48 வயதான அவர் மலையில் சிதறி மேயும் மந்தையைப் பார்த்துக் கொள்கிறார். “அதிகமாகக் கூட இருக்கலாம்,” என எண்ணிக்கையில் நிச்சயமின்றி சொல்கிறார் அவர். கடந்த 15 வருடங்களாக ஹர்தேவ் இந்த வேலையைச் செய்து வருகிறார். “சில மேய்ப்பர்களும் உதவியாளர்களும் வந்து இரண்டு வாரங்கள் இருப்பார்கள். பிறகு சென்று விடுவார்கள். என்னைப் போன்றோர் தங்கி விடுவார்கள்,” என விளக்குகிறார்.
இது அக்டோபர் மாதம். கடுமையான குளிர்காற்று, உத்தரகாண்டின் கர்வால் இமயமலையின் கங்கோத்ரி தொடரில் இருக்கும் புல்வெளியான ‘சுளி டாப்’பில் புற்களை விளாசிக் கொண்டிருக்கிறது. முட்டி மோதி மேய்ந்து கொண்டிருக்கும் விலங்குகளுக்கு மத்தியில் செல்லும் மேய்ப்பர்கள் தங்களைச் சுற்றி கம்பளி போர்த்தி இருக்கிறார்கள். இது நல்ல புல்வெளி என்கின்றனர் மேய்ப்பர்கள். மேலே இருக்கும் ஒரு பனிமேட்டிலிருந்து வரும் மெலிந்த ஓடை, விலங்குகளுக்கான உறுதியான நீராதாரமாக இருக்கிறது. பாறையின் பிளவுகளின் வழியாக நெளிந்து இறங்கி வரும் ஓடை, 2000 மீட்டருக்குக் கீழே வரைச் சென்று, பாகீரதி ஆற்றின் துணை நதியான பிலாங்கனா ஆற்றில் கலந்து முடிகிறது.









