பிப்ரவரி 18, 1983-ல் நெல்லி படுகொலை நேர்ந்தபோது ரஷித் பேகத்துக்கு வயது எட்டு. “மக்களை அவர்கள் எல்லா பக்கமும் சுற்றி வளைத்து ஒருமூலைக்கு விரட்டினர். அம்புகள் எய்தனர். சிலரிடம் துப்பாக்கிகள் இருந்தன. அவற்றை கொண்டுதான் அவர்கள் மக்களை கொன்றனர். சிலரின் கழுத்துகள் அறுக்கப்பட்டன. சிலர் மார்பில் தாக்கப்பட்ட்னர்,” என அவர் நினைவுகூருகிறார்.
மத்திய அசாமின் மோரிகாவோன் மாவட்டத்தின் நெல்லி பகுதியில், வங்காளத்தை பூர்விகமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அந்த நாளன்று வெறும் ஆறு மணி நேரத்தில் கொல்லப்பட்டனர். அலிசிங்கா, பசுந்தாரி ஜலா, போர்போரி, புக்டுபா பில், புக்டுபா ஹபி, குலாபத்தார், மடிபர்பத், முலாதரி, நெலி மற்றும் சில்பெட்டா போன்றவை மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும். அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி மொத்தமாக 2,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி 3000லிருந்து 5000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம்.
வீட்டில் ரூமி என அழைக்கப்படும் ரஷிதா அந்த படுகொலையிலிருந்து உயிர் தப்பினார். நான்கு தங்கைகள் கொல்லப்பட்டு தாய் படுகாயம் அடைந்ததை கண்ட சாட்சி அவர். “அவர்கள் வேல் கொண்டு என்னை தாக்கினர், இடுப்பில் சுட்டனர். காலை ஒரு தோட்டா துளைத்தது,” என அவர் நினைவுகூருகிறார்.
1979லிருந்து 1985ம் ஆண்டு வரை அசாமில் நீடித்த வெளியாருக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த இனக்கலவரத்தின் விளைவாக படுகொலை நேர்ந்தது. அச்சம்பவத்தை அனைத்து அசாம் மாணவர் சங்கமும் தோழமை அமைப்புகளும் முன்னெடுத்தன. சட்டவிரோதமாக மாநிலத்தில் குடியேறியவர்களை வெளியேற்ற அவர்கள் கோரினர். அவர்களின் பெயர்களும் வாக்காளர் பதிவேட்டிலிருந்து அகற்றப்பட வேண்டுமென போராடினர்.


