”பியூட்டி பார்லருக்கு போவதற்கான தேவை என்ன? சந்தைகளை சுற்றி பணம் செலவழிக்க ஒரு சாக்குதான் அது.”
தான் பியூட்டி பார்லருக்கு செல்வதில் கணவர் வீட்டார் சந்தேகம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார் மோனிகா குமாரி. நான்கு பேர் வசிக்கும் குடும்பம், கிழக்கு பிகாரின் ஜமுயிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கைர்மா கிராமத்தில் இருக்கிறது. அவர்களின் கருத்துகளை பொருட்படுத்தாமல் 25 வயது நிறைந்த அவர், புருவங்கள் வடிவப்படுத்தும் வேலையைச் செய்து கொள்கிறார். மேலுதட்டிலுள்ள முடிகளை அகற்றிக் கொள்கிறார். முகப்பொலிவுக்கான ஃபேஷியலும் செய்து கொள்கிறார். பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் அவரது கணவர் மூத்த தலைமுறையைப் போல் இல்லை. பார்லருக்கு வண்டியில் மனைவியைக் கூட்டி வந்து இறக்கிக் கூட விடுகிறார்.
மோனிகா மட்டுமின்றி ஜமுய் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் டவுன்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் இளம்பெண்களும் பெண்களும் கூட ஒப்பனைக்காக அருகே உள்ளே பார்லருக்கு செல்கின்றனர்.
“நான் பார்லருக்கு செல்லத் தொடங்கியபோது 10 பார்லர்கள்தான் இருந்தன. இப்போது ஆயிரம் இருக்குமென நினைக்கிறேன்,” என்கிறார் பிரமிளா ஷர்மா, ஜமுயியில் ஒப்பனை வணிகம் மலர்ந்த காலத்திலிருந்து தற்போதைய 15 ஆண்டு காலத்தை விவரித்து.
87,357 பேர் வசிக்கும் ஜமுய் டவுனின் பிரதானச் சாலையோரத்தில் விவாஹ் லேடிஸ் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார் பிரமிளா. இங்கிருக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் விவசாயத்தில் பணிபுரிகின்றனர்.














