பாரி ஆசிரியராகவும் கிராமப்புற இந்தியா பாடமாகவும் இருக்கும்போது கற்றல் உண்மையாகவும் உறுதியாகவும் நீடிக்கக்கூடியதாகவும் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

எங்களிடம் பயிற்சிப் பணியில் இருக்கும் ஆயுஷ் மங்களின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாரியுடன் இருந்த காலத்தை அவர், கிராமப்புற சட்டீஸ்கரில் வசிக்கும் பழங்குடிகள் மத்தியில் நிலவும் சுகாதார வசதிகள் பற்றாக்குறைக்கும் ஜோல்னாப் பை மருத்துவர்களின் உலகத்துக்குமான தொடர்பை புரிந்து கொள்வதற்கு பயன்படுத்தினார். ”தனியார் மற்றும் அரசு மருத்துவம், மற்றும் தகுதி பெற்ற, தகுதி பெறாத மருத்துவர்களுக்கு இடையே பின்னியிருந்ததொடர்பை நான் பார்த்தேன். எந்தக் கொள்கை வகுக்கப்பட்டாலும் இதை சரிசெய்ய வேண்டும்,” என்கிறார் ஜஞ்ச்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர். அப்போது பொருளாதாரத்தில் முதுகலை படித்துக் கொண்டிருந்தார் அவர்.

பாடப்புத்தகங்களில் இடம்பெறாத விளிம்பு நிலை மக்களை பற்றி அதிகமாக இளையோர் கற்கின்றனர். மாற்றுத்திறன் கொண்ட கோரா போன்றோர் ஒடிசா மாநிலத்தின் அரசுத் திட்டங்களைப் பெறுவதில் சந்திக்கும் கஷ்டத்தைப் பார்த்ததில் இதழியல் மாணவரான சுபாஸ்ரீ மோஹாபத்ரா, “எந்த நிர்வாக குறைபாடு கோராவை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியது,” என்கிற கேள்வியை கேட்க வைத்தது.

செப்டம்பர் 2022-ல் பாரியின் கல்வி அமைப்பான பாரி கல்வி ஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்தது. இந்த வருடங்களில் பல்கலைக்கழக மாணவர்களும் சமூக மாற்றத்துக்காக நிறுவனங்களில் பணிபுரியும் இளையோரும் பள்ளிகளில் படிப்போரும் சாமானிய மக்கள்கொண்டிருக்கும் பரந்த திறமைகள் மற்றும் அறிவு ஆகியவற்றைக் குறித்த ஆழமான புரிதலை பெற்றிருக்கின்றனர். மேலநிலைப் பள்ளி மாணவரான பிரஜ்வால் தாகூர் சட்டீஸ்கரின் ராய்பூரின் தானிய தோரணங்கள் கட்டுரையை ஆவணப்படுத்திய பிறகு சொன்னார்: ”விழாக்களிலும் நெல்லின் முக்கியத்துவத்திலும் இருக்கும் விவசாயிகளின் பங்கை அதிக விழிப்புணர்வை நான் பெற்றேன்.. பாரி கல்வியில் பணிபுரிந்து, நான் வாழும் சமூகம் பற்றிய புதுப் பார்வையைப் பெற்றேன்.”

காணொளி: ‘பாரி கல்வி என்பது என்ன?’

நூறுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் பல்கலைக்கழக இடங்களிலிருந்து இந்த நாளின் நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். தில்லியின் விவசாயப் போராட்டங்களை எழுதினர். நாடு முழுக்க வாழும் விளிம்புநிலை மக்களிடையே கோவிட் தாக்கத்தை கண்டறிந்தனர். புலம்பெயர் வாழ்க்கைகளின் பயணங்கள் மற்றும் சிரமங்களின் தடமறிந்தனர்.

இதழியல் மாணவரான ஆதர்ஷ் பி. பிரதீப், கொச்சியின் கால்வாய்க் கரைகளில் வாழும் குடும்பங்கள் சாக்கடை வீட்டுக்குள் நுழைந்ததும் மேட்டுப் பகுதிக்கு சென்று வாழ்வதைப் பார்த்ததும், வீடுகளை அவர்கள் ஏன் கைவிட்டு செல்ல நேரிடுகிறது என்பதைப் பற்றி கட்டுரை எழுதினார். அவர் சொல்கையில், “பாரியுடன் பணிபுரிந்தது எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. அரசு ஆவணங்களில் தரவுகள் கண்டறிவது தொடங்கி நுட்பமான விவரங்களுக்கு கவனம் செலுத்துவது வரையிலான பல விஷயங்கள். அது ஒரு கற்றல் அனுபவமாக இருந்தபோதிலும் நான் ஆய்வு செய்து கொண்டிருந்த சமூகத்துக்கு நெருக்கமாக என்னைக் கொண்டு செல்லவும் உதவியது,” என்கிறார்.

கிராமத்திலும் நகரங்களிலும் வாழும் விளிம்புநிலை மக்களின் பல்வேறு பிரச்சினைகளை அறிந்து கொள்வது மட்டுமின்றி, மாணவர்கள் அக்கட்டுரைகளை அவர்களது சொந்த மொழிகளிலும் எழுதுகிறார்கள். இந்தி, ஒடியா மற்றும் பங்ளா மொழிகளில் நாங்கள் கட்டுரைகளை பெற்றிருக்கிறோம். பாரியின் பயிற்சியின் விளைவாக, பிகாரின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த சிம்பல் குமாரி, இமாச்சல் பிரதேசத்தின் கங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த வார்டு கவுன்சிலரும் விவசாயியும் சுகாதாரச் செயற்பாட்டாளருமான தலித் பெண் மோரா வைப் பற்றி இந்தியில் எழுதினார்.

PHOTO • Antara Raman

கிராமப்பகுதிகளையும் நகர்ப்புற நிறுவனங்களையும் சேர்ந்த இளையோர் நாட்டின் 63 பகுதிகளிலிருந்து எங்களுக்காக வாழ்க்கைக் கதைகளை ஆவணப்படுத்துகின்றனர்

பாரி கல்வி இணையதளத்தில் இளையோர் சமர்ப்பித்த 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறோம். ஊடகத்தால் புறக்கணிக்கப்பட்ட அன்றாட மக்களின் வாழ்க்கைகளை மட்டும் அவர்கள் ஆவணப்படுத்தவில்லை. நீதி, சமூகம், பொருளாதாரம், பாலினம் போன்ற பல பிரச்சினைகளையும் அவர்கள் ஆராய்ந்திருக்கின்றனர்.

தில்லியின் சிறு ஆலையிலுள்ள புலம்பெயர் தொழிலாளர் உலகத்தை ஆராய்ந்த மாணவர் பர்வீன் குமார் சொல்கையில், “மக்களின் பிரச்சினைகள் தனிப்பட்ட பிரச்சினைகள் கிடையாது என்பதையும் அவை சமூகத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டிருக்கும் பிரச்சினைகள் என்பதையும் நான் புரிந்து கொண்டேன். கிராமத்தை விட்டு ஒருவர் நீங்கி, நகரத்துக்கு சென்று பணிபுரிவதென்பதுதான் அந்த சமூகம், மாநிலம் மற்றும் நாட்டின் தேவையாக இருக்கிறது,” என்கிறார்.

ஆராய்ந்து, வினையாற்றி, அடுத்தவரின்பால் கரிசனம் கொண்டு கற்பதன் வழியாகத்தான் சமூகம் பற்றிய புரிதலைக் கட்டியெழுப்ப முடியும். பாரி கல்வி வாழ்க்கைக்கான கல்வி. மாணவர்களுடன் தொடர்பு கொள்ள முடிபவர்கள்தான் சிறந்த ஆசிரியர்கள். பாரி அதைத்தான் செய்கிறது. கிராமப்புற இந்தியாவை இளைய இந்தியர்களிடம் தொடர்புற வைக்கிறது.

பாரி கல்வியை [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முடியும்.


அட்டைப் படம்: பினாஃபர் பருச்சா

தமிழில் : ராஜசங்கீதன்

PARI Education Team

We bring stories of rural India and marginalised people into mainstream education’s curriculum. We also work with young people who want to report and document issues around them, guiding and training them in journalistic storytelling. We do this with short courses, sessions and workshops as well as designing curriculums that give students a better understanding of the everyday lives of everyday people.

Other stories by PARI Education Team
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan