“பகல் நேரத்தில் என் குழந்தைகளை தூங்க வைத்துவிடுவேன். அப்போதுதான் அவர்கள் வீட்டுக்குள் இருக்க முடியும். மேலும் பிற குழந்தைகள் உணவு சாப்பிடுவதை பார்ப்பதிலிருந்து அவர்களை தடுக்கவும் முடியும்,” என ஏப்ரல்14ம் தேதி பேசியபோது சொன்னார் தேவி கனகராஜ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). சில நாட்களுக்கான உணவு மட்டுமே அப்போது அவரிடம் இருந்தது. “அவர்களுக்கு போதுமானதை என்னால் தர முடியவில்லை. உதவி கேட்கவென எனக்கு யாரும் இல்லை” என்கிறார் அவர்.
அருந்ததியர் சமூகத்தின் பல பெண்களை போல வறிய நிலையில் இருப்பவர் தேவி. பட்டியல்சாதியை சேர்ந்தவர். தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள எடயப்பொட்டல்பட்டி கிராமத்தில் வசிப்பவர். 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிவகாசியிலுள்ள பட்டாசு ஆலையில் வாரக்கூலிக்கு வேலை பார்க்கிறார் 28 வயதான தேவி. வெடிமருந்தை குழாய்களிலும் பேப்பர் குப்பியிலும் நிரப்புகிற ஆபத்தான வேலை. மார்ச் 24 அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு முன் வரை ஒரு நாளுக்கு 250 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
ஏப்ரலின் தொடக்கத்தில். மாநில அரசின் நிவாரணப் பொருட்களாக 15 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் பெற்றார் தேவி. ஆனால் அதுவும் வேகமாக தீர்ந்து போய்விட்டது. “அரசிடமிருந்து 1000 ரூபாய்யும் கிடைத்தது. அதில் காய்கறியும் மளிகை பொருட்களையும் வாங்கினோம். நியாயவிலைக் கடை எங்களுக்கு எண்ணெய் கொடுக்கவில்லை. சிக்கனமாக சாப்பிடுகிறோம். ஒரு நாளைக்கு இரண்டு வேளைதான் சாப்பாடு,” என்றார்.
மே மாத தொடக்கத்தில் தேவியின் குடும்பத்துக்கு 30 கிலோ அரிசியும் ஒரு கிலோ பருப்பும் ஒரு லிட்டர் எண்ணெய்யும் இரண்டு கிலோ சர்க்கரையும் கிடைத்தது. இரண்டு வாரங்கள் கழித்து அரிசியில் கொஞ்சம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. “காய்கறியும் மளிகைப்பொருளும் வாங்க பணமில்லை,” என்கிறார். “இப்போது சாதமும் ஊறுகாயும் மட்டுமே சாப்பிடுகிறோம்.”
குறைந்த கொரோனா பாதிப்புகள் இருந்தமையால் மே 18ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. 12, 10 மற்றும் 8 வயதாகும் மகள்களுக்கு உணவு வாங்க பணம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வேலைக்கு திரும்பினார் தேவி. அவருடைய கணவர் ஆர்.கனகராஜ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) 30 வயதானவர். லாரி ஓட்டுநராக பணிபுரிகிறார். சம்பாதிப்பதில் பெரும் பகுதியை குடிக்கே செலவழிக்கிறார்.





