“நான் வேகமாக ஓடிவந்து குனோவில் வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டும்.”
இதுதான் அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி வழியாக சின்ட்டு எனும் வேங்கை, கேட்கவோ அல்லது படிக்கவோ தயாராக உள்ளவர்களுக்கு சொல்லும் செய்தியாகும்.
உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி மத்திய பிரதேச வனத்துறை அதிகாரிகள் ஆறு மாதங்களுக்கு முன்பு வைத்த சுவரொட்டி இது. இச்சுவரொட்டியில் இருக்கும் நட்பு கதாபாத்திரமான ‘சின்ட்டு வேங்கை’, குனோ தேசியப் பூங்காவைச் சுற்றியுள்ள கிராமங்களை தனது வீடாக மாற்றவிருப்பதாக தெரிவிக்கிறது.
உயிருடன் உள்ள 50 ஆப்ரிக்க வேங்கைகளுடன் சின்ட்டுவும் இவ்வீட்டில் வசிக்கப் போகிறான். ஆனால் அதற்காக பக்சா கிராமத்திலிருந்து 556 மனிதர்கள் வேறு ஏதேனும் இடத்திற்கு மறுகுடியமர்த்தப்பட உள்ளனர். காடுகளுடன் பின்னிப் பிணைந்துள்ள சஹாரியா பழங்குடியினரின் அன்றாட வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் இந்த வெளியேற்றம் மோசமாக பாதிக்கப் போகிறது.
தேசியப் பூங்காவிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ள வேங்கைகளை அதிக விலை கொடுத்து சஃபாரி பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே காண முடியும். உள்ளூர் மக்கள் குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் இதிலிருந்து இயல்பாகவே விலக்கப்படுகின்றனர்.
சரணாலயத்திற்கு வெளியே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குக்கிராமமான பைரா ஜாதவில் வசிக்கும் எட்டு வயது சிறுவன் சத்யன் ஜாதவிற்கு ‘அன்பான’ கேலிச்சித்திர சுவரொட்டியில் காணப்படும் பூனை குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. அவன் தனது தந்தையிடம், “இது ஆடா?” எனக் கேட்டான். அவனது நான்கு வயது தம்பி அனுரோதிற்கு அது ஒரு நாயின் வகை எனத் தோன்றுகிறது.














