“இந்தாண்டு மக்கள் விநாயகர் சிலைகளை வாங்குவார்கள் என நினைக்கிறீர்களா?” என்று விசாகப்பட்டினத்தின் கும்மாரி வீதியில் (குயவர் தெரு) வசிக்கும் யு. கெளரி ஷங்கர் கேட்கிறார். “நாங்கள் கடவுளின் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வோர் ஆண்டும் சிலைகளைச் செய்கிறோம். கடவுளின் கருணையால், எங்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்து வந்தது” என்றார். “ஆனால், இந்தாண்டு கடவுளைக் காணவில்லை, ஊரடங்கும் வைரசும்தான் இருக்கின்றன.”
63 வயதாகும் ஷங்கர், 42 வயதாகும் அவரது மகன் வீரபத்ரா, 36 வயதாகும் மருமகள் மாதவி ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்தின் இந்நகரில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் விநாயகர் சிலைகளை தங்கள் வீட்டில் செய்யத் தொடங்குவார்கள். தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு ஜூன் மாத மத்தியில்தான் பணியைத் தொடங்கியிருக்க முடியும்.
இயல்பாக ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் (குயவர்களின் பண்டிகை காலம்) விநாயகர் சதுர்த்தி முதல் தீபாவளி வரையில் கிடைக்கும் ஆர்டர்கள் மூலம் தலா ரூ.20,000 முதல் ரூ.23,000 வரை மாத வருவாய் ஈட்டுவார்கள். ஆனால் இந்தாண்டு விநாயகர் (கணேஷ்) சதுர்த்திக்கு முன்பான 48 மணி நேரம் வரை சிலைகள் செய்ய எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை.
15 ஆண்டுகளுக்கு முன்பு குயவர் தெருவில் 30 கும்மாரா குடும்பங்கள் தங்கி, இப்பணியில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தனர். ஆனால் இப்போது நான்கு குடும்பங்கள் மட்டுமே உள்ளன. மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு தொடங்கியது முதல் அவர்களின் நிலைமையும் மோசமானது.
“சிலைகளை சிறு வியாபாரிகளுக்கு விநியோகம் செய்யும் வணிகர்களிடம் இருந்து எங்களுக்கு மொத்த ஆர்டர்கள் வரும். இந்தாண்டு அப்படி ஒன்று கூட வரவில்லை,” என்கிறார் ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாதவி. அவரது கணவரின் தாத்தா பாட்டி, கிராமத்திலிருந்து வந்து தற்போது விஜயநகரம் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.











