தனது நிலம் பறிபோகும் வரை பத்மாபாய் கஜாரிக்கு இது கடந்துபோகும் ஒரு விஷயமாகத் தான் இருந்தது. “இந்த நிலம் இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் எப்படி பிழைத்திருப்போம் என்பது கடவுளுக்கே தெரியும்,” என்கிறார் அவர்.
39 வயது கணவர் பண்டாரிநாத் இருசக்கர வாகன விபத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்த பிறகு பத்மாபாய் ஓய்வின்றி உழைத்து, இழப்பிலிருந்து மீண்டு, தனது குடும்பத்தை நிலைநிறுத்தினார். இரு மகன்கள், இரு மகள்கள், தனது தாய், 6.5 ஏக்கர் நிலம் ஆகியவற்றை பண்டாரிநாத் விட்டுச் சென்றார்.
“நான் அச்சத்துடன், தனிமையாக இருந்தேன்,” என்று அவுரங்காபாதின் வைஜாபூர் தாலுக்கா ஹதாஸ் பிம்பல்கான் கிராமத்தில் உள்ள தனது இரண்டு அறை கொண்ட வீட்டில் அமர்ந்தபடி அவர் சொல்கிறார். “என் பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தனர். பொறுப்புகளை நானே எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. சமையலறையை கவனித்தபடியே விவசாயத்தையும் நான் தொடங்கினேன். இன்றும் நான் நிலத்தில்தான் அதிகம் வேலை செய்கிறேன்.”






