"ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எங்களுக்கு கோவிட் -19 வைரஸ் தொடர்பான சோதனைகளை வாட்ஸ்அப் வழியாக அனுப்பியது - அவற்றில் அவரவரின் பாஸ்போர்ட் எண்களும் எங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிய தகவலும் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. பரீட்சைப் பேப்பரின் ரிசல்ட் எப்படி வெறும் எண்களாக நாளிதழ்களில் வெளியாகுமோ அதே போல அவர்கள் அனுப்பிய விவரங்கள் இருந்தன. உண்மையான மருத்துவ அறிக்கைகள் எதுவும் இன்றுவரை எங்களுக்கு அவர்கள் அனுப்பவில்லை” என்கிறார் ஷபீர் உசேன் ஹக்கிமி. பாசிட்டிவா அல்லது நெகட்டிவா எனும் விவரம் மட்டுமே தரப்பட்டது. ஈரானில் உள்ள கோமில் இருந்து எங்களுடன் பேசிய லடாக் பகுதியின், கார்கில் நகரைச் சேர்ந்த 29 வயதான இவர், தனது பெற்றோருடன் இந்த ஆண்டு ஜனவரியில் ஷியா முஸ்லிம்களுக்குப் புனிதமான ஆலயங்களுக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஷியா பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஈரான் நாட்டுக்குச் சென்று இமாம் அலி, உசேன் மற்றும் நபிகள் நாயகத்தின் இதர குடும்ப உறுப்பினர்களின் புனித இடங்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அவர்களில் முக்கியமாக ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த சுமார் 1,100 பேர் கொரோனா வைரஸ் தொடர்பான நோய் ஈரானைத் தாக்கியபோது அங்கிருந்தனர். அந்த தொற்றுநோய் பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்தியாவுக்கு திரும்பும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டபோது கோம் நகரில் சிக்கித் தவித்தனர்.
"எங்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று மார்ச் 2 ஆம் தேதி சோதிக்கத் தொடங்கினார்கள். மார்ச் 10 வரை சோதித்தார்கள். எங்களின் உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்காக புனே நகரத்துக்கு அனுப்பப்படும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது, புனித யாத்திரைக்காக வந்திருக்கிற ஒவ்வொருவரும் அந்தச் சோதனைக்குப் பிறகு, இந்தியாவுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டது” என்கிறார் ஷபீர். 78 புனிதப் பயணிகளிடம் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில் யாருக்கும் கிருமித் தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டன, மார்ச் 10 அன்று ஐ.ஏ.எஃப் சி -17 விமானம் மூலம் இந்தியாவுக்கு போவதற்காக அவர்கள் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டனர்.
"ஆச்சரியப்படும் விதமாக, அவர்களில் 19 பேர் எந்த காரணமும் தெரிவிக்கப்படாமல் திரும்பவும் கோம் நகரத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்" என்று ஷபீர் கூறுகிறார். விரைவில், லடாக்கிலிருந்து வந்த 254 புனிதப் பயணிகளுக்கு நோய்த் தொற்று இருக்கிறது என்று சோதனை முடிவுகள் வந்தன. "அவர்களைத் தனிமைப்படுத்துவது எனும் நடைமுறையை அமலாக்குவதை மறந்துவிடுங்கள்.நோய்த் தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தூதரகம், ஒரு சாதாரண முகமூடியைக் கூடத் தரவில்லை. அதற்கு பதிலாக, எங்களில் சிலர் தானாக முன்வந்து, கோமிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அவர்களை அழைத்துச் சென்றோம், குறைந்தது ஒரு சிலராவது மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.”
தெஹ்ரான் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு இந்த செய்தியாளர் மூன்று நாள்களுக்கு முன்பாக அனுப்பிய கேள்விகளுக்கான பதில்களுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.








