இரண்டுக் குழந்தைகள் இருக்கின்றன எனத் தனியார் பிரசவ மையத்தின் மருத்துவரிடம் உறுதியாகச் சொல்கிறார் ரோபி எந்தப் பரிசோதனை அறிக்கையும் பார்க்காமலே.
இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை ஆனந்தத்துடன் நினைவுகூர்கிறார் ரோபி. "அவள் அதை காதில் மாட்டியிருந்தாள்," என்கிறார் அவர், ஸ்டெத்தஸ்கோப்பை குறிப்பிட்டு. பலவீனமாக இருந்த கர்ப்பிணியின் பருத்திருக்கும் வயிறைப் பார்த்துவிட்டு ரோபியின் இரட்டைக் குழந்தை என்ற ஆரூடத்தை மருத்துவர் மறுத்தார்.
"இரண்டு மேடம், இரண்டு பிறக்கும்," என அவர் மீண்டும் சொன்னார். பிறகு பிரசவ அறையிலிருந்து ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டார். 70 வயதுகளில் இருக்கும் ரோபியும், வலியால் துடித்துக் கொண்டிருக்கும் தாயாகப் போகிறவரும் மெல்காட் காட்டுப் பகுதியின் விளிம்பில் இருக்கும் அவர்களின் கிராமமான ஜைதாதேகியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பரத்வாடா டவுனில் இருந்தனர்.
மாலையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நொடிகள் கடந்ததும் இரண்டாம் குழந்தையின் தலை வெளியே வந்தது. பெண் குழந்தை.
அவரின் பாரம்பரிய வீட்டின் தாழ்வாரத்தின் ஒரு முனையிலிருக்கும் ஒரு மரக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ரோபி சத்தமாக சிரிக்கிறார். அந்த வீட்டின் தரை மாட்டுச்சாணத்தால் துடைக்கப்பட்டுப் பளபளப்பாக இருந்தது. மூன்று அறைகளும் காலியாக இருந்தன. அவரின் மகன்கள் குடும்ப நிலமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கச் சென்றிருக்கின்றனர்.
கழுதையின் அந்தரங்க உறுப்பைக் குறிக்கும் ஒரு வசவு வார்த்தையைச் சொல்லி இன்னும் அதிகமாக சிரிக்கிறார். முக வரிகள் ஆழமாகின. "அப்படித்தான் நான் அவளைச் சொன்னேன், " என்கிறார் அவர் ஒரு நகர மருத்துவரைத் திட்டிய சம்பவத்தை நினைவுகூர்ந்து.











