அப்துல் ரஹ்மானின் உலகம் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், உடல் ரீதியாகவும் சுருங்கி விட்டது. நான்கு கண்டங்களில் உள்ள தொழிலாளர் குழுக்களில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளியான அவர் இப்போது ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் 150 சதுர அடி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மும்பையின் டாக்ஸி டிரைவரான இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் கிராமப்புறத்திலிருந்து இந்த நகரத்திற்கு வந்தார். கடந்த காலத்தில் சவுதி அரேபியா, துபாய், பிரிட்டன், கனடா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் புல்டோசர்கள் மற்றும் கார்களை ஓட்டியுள்ளார். இன்று, அவரை ஒரு நாற்காலியில் வைத்து, மஹிம் சேரிக் காலனியின் குறுகியப் பாதை வழியாக சியோனில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடிய டாக்ஸிக்கு அவரைத் தூக்கிச் செல்ல வேண்டும்.
மருத்துவமனைக்குச் செல்லும் நேரம் வந்ததும், ரஹ்மான் தனது அறையிலிருந்து இறங்குவதற்குத் தயாராகிறார். ஏணி கதவுக்கு வெளியே உள்ளது. அவர் தரையில் அமர்ந்திருக்கிறார். அவரது மகன் கீழே இருந்து கால்களைப் பிடித்துள்ளார். ஒரு மருமகன் அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மேலே இருந்து அவரைத் தாங்கிப் பிடிக்கிறார். ஒன்பது செங்குத்தான படிக்கட்டுகளில் ஒரு நேரத்தில் ஒரு படி என வலியுடன், மெதுவாக கீழே இறங்கினார் ரஹ்மான்.
கீழே உள்ள குறுகியப் பாதையில், ஒரு பழைய பெயிண்ட் படிந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அவர் இறங்கினார். முடமான அவரது வலதுகால் அதில் இருந்தது. பின்னர் அவரது மகனும் மேலும் இருவரும் நாற்காலியை நீண்ட மற்றும் வளைந்து செல்லும் பாதையின் வழியாக, மஹிம் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள சாலையை நோக்கிக் கொண்டுச் சென்றனர். அங்கே, ரஹ்மான் ஒரு டாக்ஸியில் ஏற்றப்பட்டார்.
ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சியோனில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லும் டாக்ஸிக் கட்டணம், அவருக்கு மிக அதிகமான தொகை. இருப்பினும், கடந்த ஆண்டில் பல மாதங்களாக, காலில் கட்டு போட வாரந்தோறும் அவர் அங்கு செல்ல வேண்டியிருந்தது. காயம் சிறிது குணமாகிய பிறகு, மருத்துவமனைக்கு செல்வது குறைந்தது. இருப்பினும் அவ்வப்போது ’நாற்காலி ஊர்வலம்’, வடக்கு மும்பையின் மோரி சாலையில் உள்ள காலனின் இருபுறமும் இரண்டு-மூன்று அடுக்குகளில் குறுகிய அறைகளை கொண்டிருக்கும் காலனியின் குறுகியப் பாதையில் நடக்கிறது.














