அவர்களின் 160 வருட பாரம்பரியத்தை விட்டுவிடாமல் இருக்கவே அக்குடும்பம் விரும்புகிறது. “எனக்குப் பத்து வயது இருக்கும்போது அமெரிக்காவிலிருந்து ஒரு பத்திரிகையாளர் எங்கள் வீட்டிற்கு வந்தார்”, என்று நினைவுகூர்கிறார் ரமேஷ். “இவ்வளவு குறைவாகத்தான் சம்பாதிக்கிறோமா என்று அதிர்ந்துபோன அவர், என்னையும் என் சகோதரிகளையும் ஊட்டியில் உள்ள கான்வென்ட் பள்ளியில் சேர்க்க உதவுவதாகச் சொன்னார். ஆனால் என் தந்தை மறுத்துவிட்டார். நாங்கள் பானை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரின் முடிவாக இருந்தது”. ரமேஷின் இளமைக் காலத்தில் அவருக்குப் பானை செய்யச் சொல்லிக்கொடுத்தது 90 வயது நிரம்பிய அவரது தாத்தாதான். “இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை அவர் கடம் செய்துக்கொண்டுதான் இருந்தார்”, என்று ரமேஷ் சொல்ல, மீனாட்சி இடைமறித்து, “என் மாமனார் அவரைப் புகைப்படம் எடுக்க யாரையும் அனுமதிக்கவில்லை; அதனால்தான் அவர் நீண்ட ஆயுளோடு வாழ்ந்தார்”, என்கிறார். குற்ற உணர்ச்சியுடன் என் கேமராவைக் கீழே வைக்கிறேன்.
லாபம் குறைவாக வந்தாலும் இத்தொழிலை லாபநோக்கோடு பார்க்காமல் தன் கலைச் சேவையாகவே பார்க்கிறார் மீனாட்சி. பல காலத்திற்குப் பக்கவாத்திய இசைக்கருவியாகவே பயன்பட்ட கடம், இன்று பல நிகழ்வுகளில் முதன்மை வாத்தியமாக வாசிக்கப்படுகிறது; மீனாட்சி செய்த பல கடங்கள் இன்று பல நிகழ்ச்சிகளில் வாசிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு அவர் சென்றுள்ளார். ரமேஷ்தான் எல்லா தகவல்களையும் நமக்குத் தருகிறார். அவரது அம்மாவிற்கு இப்படியெல்லாம் பேசிப் பழக்கமில்லை. அகாடமி விருது பெற்ற பிறகு நடந்த நேர்காணல்கள் அனைத்தும் மீனாட்சியை அதிகம் பேசாத, தன்னைப் பற்றித் தானே பேச சங்கடப்படுகிற பெண்மணி என்றுதான் வருணித்தன. “சென்ற வருடம் நடந்த அகில இந்திய வானொலி நேர்காணல்தான் என் அம்மா கொடுத்த முதல் நீண்ட நேர்காணல். அதில் என் தந்தைக்கு என்ன குழம்பு பிடிக்கும் என்பது பற்றியெல்லாம் பேசியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்”, என்று சிரிக்கிறார் ரமேஷ்.
அவரது தொழில் குறித்து நம்மிடம் குறைவாகவே பகிர்ந்துக்கொள்கிறார் மீனாட்சி. கடம் செய்வது அவர்களின் முக்கிய வருவாயாக இல்லை. அவர்கள் பல வகையான மண்பாண்டங்களை செய்கிறார்கள். அவை சமையல் செய்ய, சித்த மருந்துகள் தயாரிக்க என்று பல வகைகளில் பயன்படுகின்றன. அதிலிருந்துதான் அவர்களுக்கு நிலையான வருமானம் வருகிறது. மீனாட்சி, அவர் மகள் கே.பரமேஷ்வரி, மகன் ரமேஷ், ரமேஷின் மனைவி மோகனா ஆகியோர், மேலும் சிலரின் உதவியோடு வருடத்திற்கு சுமார் 400 கடங்களை உருவாக்குகிறார்கள். அதில் பாதியைத்தான் விற்க முடியும்; மீதி தொனி சரியாக அமையாமல் வீணாகும். பானைகள் சுடப்பட்ட பின்னரே அதன் தொனி சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்க முடியும்; அதனால் அவற்றை மீட்டுருவாக்க முடிவதில்லை. சில சமயம், பார்க்க நன்றாக இருக்கும் கடங்கள் வாசிக்கத் தகுதியற்றவையாக இருக்கும்.
“இந்தத் தொழிலுக்குப் பொருளாதார உதவி என்றெல்லாம் எதுவும் இல்லை. அரசாங்கம் இக்கலையை ஆதரிப்பதில்லை. மேலும், இசைக்கலைஞர்களுக்கு விருது கொடுத்து ஊக்குவிக்கும் அரசு, இசைக்கருவிகளை உருவாக்கும் எங்களை ஊக்குவிப்பதில்லை”, என்று வருத்தப்படுகிறார் ரமேஷ். ஆனாலும் இத்தனை சவால்களைத் தாண்டி, தன் குடும்பம் இன்றும் பல பேருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்பதில் அவருக்குப் பெருமையே.
நாங்கள் அங்கே செல்லும்போது மதிய நேரம்; மழை லேசாகத் தூறிக்கொண்டிக்க, வெளிமுற்றத்தில் பாதி காய்ந்த நிலையில் இருந்த பானைகளை அவர்கள் உள்ளே எடுத்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே அறைகள் முழுவதும் மண்பாண்டங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உயர அடுக்கப்பட்டிருக்கின்றன. வானம் மந்தமான சலனத்துடன் மழை பெய்யப் போகும் அறிகுறியைக் காட்டுகிறது. வெயில் போனதால் அவர்களின் பணி தடைபட்டுவிட்டது. ரமேஷ் சாவகாசமாக ஒரு கடத்தை மடியில் கிடத்தி வாசிக்க ஆரம்பிக்கிறார். அவரது கை கால் முழுவதும் பச்சைக் களிமண்; ஆனால் பார்க்க அது சந்தனத்தைப் பூசியதுபோல் இருக்கிறது. கடத்தின் வாய் அருகே தன் விரல்களால் ஒரு தட்டு தட்டுகிறார். ‘டிங்’ என்று ஒரு கூர்மையான ஒலி எழும்புகிறது. “நான் முறைப்படி இசைக் கற்றவன் இல்லை”, என்கிறார் தன்னடக்கத்துடன். ஆனால் தொனி சரியாக அமைகிறதா என்று சரிபார்க்கும் அளவிற்கு இசையறிவு கொண்டவராகவே அவர் இருக்கிறார்.
“பல தாள வாத்தியங்கள் மிருகத் தோல்களால் ஆனவை. ஆனால் பஞ்ச பூதங்களால் ஆன ஒரே வாத்தியம் கடம் மட்டும்தான். பூமியிலிருந்து களிமண் எடுத்து, தண்ணீரைக்கொண்டு அதை வடிவமாக்கி, அதை சூரிய வெயிலில் காற்று அடிக்கும்போது காயவைத்து, பின்னர் அதை நெருப்பில் சுட்டு உருவாக்குகிறோம்”, என்று ரமேஷ் விளக்குகிறார். ஆனால் அவர் மனித உழைப்பை அவற்றோடு சேர்த்துச் சொல்லவில்லை. அவர் சொல்லத் தேவையே இல்லை. ஏனெனில், நாம் அங்கு காதால் கேட்பதெல்லாம் வீட்டிற்குள்ளே தாழ்வாரத்தில் மீனாட்சி கடத்தைத் தட்டிக்கொண்டிருக்கும் ஒலியைத்தான். பக்கங்கள் வழுவழுப்பாகவும், சுருதி பிசகாமலும் அமையும் வரை அந்த கடத்தை மீனாட்சி தட்டிக் கொண்டே இருக்கிறார், கை வலியைப் பொருட்படுத்தாமல்.