அந்த இரவில் ஒட்டுமொத்த மலையும் சரிந்தது.
அன்று இரவு 11 மணி. அடுத்தடுத்து 4-5 வீடுகளில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் 17 பேருடன் அனிதா பகடி உறங்கிக் கொண்டிருந்தார். “பயங்கர சத்தம் கேட்டு நாங்கள் விழித்தோம், உடனடியாக நடந்ததை உணர்ந்து கொண்டோம்,” என்கிறார் அவர். “இரவில் நாங்கள் ஓடத் தொடங்கினோம். எங்களுக்கு அருகே இருந்த வீடுகள் சரிந்து கிடந்தன.”
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டம், படான் தாலுக்காவிற்கு நடுவே உள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள மிர்கான் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அனிதாவின் வீடு தப்பியது. இந்தாண்டு ஜூலை 22ஆம் தேதி இரவு அவர் தனது விவசாய கூட்டுக் குடும்பத்தில் 11 பேரை இழந்துவிட்டார். இறந்தவர்களில் மிக சிறியவரான 7 வயது அண்ணன் மகன் யுவராஜூம், தூரத்து உறவினரான 80 வயது யசோதா பகடியும் அடங்கும்.
அடுத்தநாள் காலை, பேரிடர் மீட்புக்குழு வந்தது. 43 வயது அனிதா உள்ளிட்டோரை கிராமத்திலிருந்து மீட்டு சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொய்னாநகர் கிராம சில்லா பரிஷத் பள்ளிக்கு அழைத்துச் சென்றது. கொய்னா அணை மற்றும் நீர்மின் திட்டத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மிர்கான்.










