“பள்ளியில் நான் கற்பவை யாவும் வீட்டில் இருக்கும் யதாரத்தத்துக்கு எதிராக இருக்கிறது.”
ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமியான பிரியா மலை மாநிலம் உத்தரகாண்டைச் சேர்ந்தவர். மாதவிடாய்காலத்தில் அவர் பின்பற்ற வேண்டிய கடுமையான விதிமுறைகளைப் பற்றி பேசுகிறார். ”கிட்டத்தட்ட இரண்டு உலகங்களில் வாழ்வதைப் போல இருக்கும். வீட்டில் நான் தனியாக வைக்கப்பட்டு எல்லா சடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். பள்ளியில் ஆண்களுக்கு பெண்கள் நிகர் என சொல்லிக் கொடுப்பார்கள்,” என்கிறார் அவர்.
11ம் வகுப்பு படிக்கும் பிரியாவின் பள்ளி அவரது கிராமத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள நனக்மட்டா டவுனில் இருக்கிறது. தினமும் அங்கு சைக்கிளில் சென்று வருகிறார். நல்ல மாணவியான அவர், தொடக்கத்தில் தனக்குத்தானே கற்பிக்க முயற்சித்தார். “நான் புத்தகங்களை வாசித்தேன். அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டுமென யோசித்தேன். உலகை மாற்றப் போவதாக எண்ணினேன். ஆனால் இந்த சடங்குகளில் பயனில்லை என என் குடும்பத்திடம் சொல்லி என்னால் புரிய வைக்க முடியவில்லை. அவர்களுடன் இரவு பகலாக வாழ்கிறேன். எனினும் இவற்றால் பயனில்லை என அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை,” என்கிறார் அவர்.
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் சார்ந்து அவருக்கு தொடக்கத்தில் இருந்த சங்கடம் மறையவில்லை. எனினும் பெற்றோரின் சிந்தனைக்கு ஏற்ப அவர் இப்போது நடக்கிறார்.
பிரியாவும் அவரது குடும்பமும் தாழ்வானப் பகுதியில் வசிக்கின்றனர். மாநிலத்தின் அதிக விளைச்சல் கிடைக்கும் பகுதி அது. மூன்று அறுவடைக்காலங்கள் அப்பகுதியில் உண்டு. குறுவை, சம்பா மற்றும் பங்குனிப் பயிர்கள். பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். பசுக்கள், எருமைகள் உள்ளிட்ட கால்நடைகளை கொண்டிருக்கின்றனர்.











