இப்பகுதியின் பிற இடங்களில் 47 டிகிரி வெயில் கொளுத்தினாலும் இங்கு குளுமையாக இருக்கிறது. நாங்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில்தான் மைனஸ் 13 டிகிரி கொண்ட இடம் இருந்தது. இந்த ”இந்தியாவின் முதல் பனி குவிமாடம்” வெயில் கொளுத்தும் விதர்பாவில் இருக்கிறது. சறுக்கி விளையாடும் களத்தின் ஐஸ் உறுதியாக இருப்பதற்கு மின்சார செலவு மட்டும் நாளொன்றுக்கு 4,000 ரூபாய் ஆகிறது.
நாக்பூர் (கிராமப்புற) மாவட்டத்தின் பஜார்காவோன் கிராமப் பஞ்சாயத்திலுள்ள ஃபன் & ஃபுட் வில்லேஜ் வாட்டர் & அம்யூஸ்மெண்ட் பார்க்குக்கு வரவேற்கிறோம். பெரும் வளாகத்தின் அலுவலகத்துக்கு வருபவர்களை மகாத்மா காந்தியின் படம் வரவேற்கிறது. தினமும் நடக்கும் ‘டிஸ்கோ’ நடனம், ஐஸ் ஸ்கேட்டிங், ஐஸ் சறுக்காட்டம், மதுபானங்கள் கொண்ட விடுதி யாவும் உண்டென உத்தரவாதம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்கா, 18 விதமான நீர் சறுக்கு விளையாட்டுகளை கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கான விழா தொடங்கி, அலுவல் கூட்டங்கள் வரை நிகழ்வுகள் நடத்துவதற்கான சேவைகளும் வழங்கப்படுகின்றன.
பஜார்காவோன் கிராமம் (3,000 மக்கள்தொகை) பெரும் நீர் நெருக்கடியை சந்தித்து வருகிறது. “நீரெடுக்க அன்றாடம் பல முறை நடக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பெண்கள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் நீரெடுக்க நடக்கின்றனர்,” என்கிறார் ஊர்த் தலைவர் யமுனாபாய் உய்க்கி. இந்த மொத்த கிராமத்துக்கும் ஒரே ஒரு அரசதிகாரிதான் இருக்கிறார். சில நேரங்களில் நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை நாங்கள் நீரெடுக்கிறோம். இன்னும் சில நேரங்களில் பத்து நாட்களுக்கு ஒருமுறை கூட எடுக்கிறோம்.”
பஞ்சம் தாக்கிய பகுதியென 2004ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இடத்தில் பஜார்காவோன் இருக்கிறது. அதற்கு முன்பு அப்படியொரு நிலை அப்பகுதிக்கு நெர்ந்ததில்லை. மேலும் அந்த கிராமத்தில் மே மாதம் வரை ஆறு மணி நேரத்துக்கு அதிமான மின் துண்டிப்பும் தினமும் இருந்தது. அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் இது பாதித்தது. ஆரோக்கியம் மோசமானது. பெரும் பாதிப்பை எதிர்கொண்ட குழந்தைகள் தேர்வுகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. 47 டிகிரி வரை தொட்ட கோடை வெயில் நிலவரத்தை இன்னும் மோசமாக்கியது.
கிராம வாழ்க்கையில் இருக்கும் கொடுமையான இந்த விதிகள், ஃபன் & ஃபுட் வில்லேஜுக்குக் கிடையாது. தனியாருக்கு சொந்தமான இந்த பாலைவனச் சோலையில் பஜார்காவோன் கனவிலும் காண முடியாதளவுக்கு நீர் இருக்கிறது. ஒரு கணம் கூட மின்சாரம் துண்டிக்கப்படுவதில்லை. “மின்சாரக் கட்டணத்துக்கென மாதந்தோறும் சராசரியாக 4 லட்ச ரூபாய் கட்டுகிறோம்,” என்கிறார் பூங்காவின் பொது மேலாளர் ஜஸ்ஜீத் சிங்.






