கடந்தாண்டு காலுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 72 வயது ஆதிலக்ஷ்மிக்கு சரிவுப் பாதையில் ஏறி, சந்தில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்வது கடினமானது. தெற்கு பெங்களூரின் சுட்டாகுண்டே பல்யா பகுதியின் பவானி நகர் குடிசைப் பகுதிகளில் உள்ள அந்த ஒற்றை அறை கொண்ட வீட்டை குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேருடன் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட கிராமத்திலிருந்து பெங்களூருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி ஆதிலக்ஷ்மியும், அவரது 83 வயது கணவர் கண்ணையா ராமும் புலம்பெயர்ந்தனர். கணவருக்கு கிடைத்த தச்சு வேலையைக் கொண்டு அவர் தனது இரண்டு மகன்கள், மகள்களை வளர்த்துள்ளார்.
“வயதாகிவிட்டது என்பதற்காக நான் சாப்பிடத் தேவையில்லையா?” என அவர் கேட்கிறார். இந்த துரதிஷ்டவசமான கேள்வியை கடந்த ஆறு மாதங்களாக அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். மாதந்தோறும் ஒருவருக்கு ஏழு கிலோ என அளிக்கப்படும் இலவச அரிசி அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அரிசியுடன் மானிய விலையில் ரூ.150 செலுத்தி வாங்கி வந்த உப்பு, சர்க்கரை, பாமாயில், சோப் போன்றவையும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இந்த முதிய தம்பதிகளுக்கு ரேஷன் ஏன் மறுக்கப்படுகிறது? வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு இருவரது கைரேகையும் பொருந்தவில்லை. பெங்களூருவில் உள்ள ரேஷன் கடைகளில் இதற்காக சிறிய இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று நகரில் சுமார் 1,800 கடைகள் உள்ளன.







