தெபாசிஷ் மொண்டல் தனது வீட்டின் இடிந்த சுவரை வெறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்த இந்த வீட்டில் எஞ்சியிருப்பது எல்லாம் உடைந்த செங்கல் சிமென்ட் துண்டங்களும், உடைந்த கூறையும் தான்.
நவம்பர் 11 ஆம் தேதி அன்று, வடக்கு கொல்கத்தாவின் தல்லா பாலத்தின் கீழ், அவர் வாழ்ந்த காலனி, சுமார் 60 குடும்பங்களின் வீடாக இருந்தது, இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அன்று காலை 10:30 மணி அளவில் உள்ளூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப் பணித்துறையின் பணியாளர்கள், போலீசாருடன் வந்திருந்தனர். இடிப்பதற்காக அவர்கள் தொழிலாளர்களையும் அழைத்து வந்திருந்தனர், இரண்டு நாட்களுக்குப் பிறகு சில சிமெண்ட் கட்டிடங்களை இடிப்பதற்கு புல்டோசரையும் வரவழைத்தனர். பஸ்தியை இடிப்பதற்கு ஒரு வாரம் ஆனது. இரண்டு பாதி இடிக்கப்பட்ட வீடுகள் இன்னமும் இருக்கின்றன அதே வேளையில் தினக் கூலிகள் (டிசம்பர் மாதத்தில்) தரையை சமன் செய்ய இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.
தல்லா பாலம் பி.டி சாலையின் நஸருல் பாதையில் அமைந்துள்ளது. பஸ்தியில் வசித்து வந்த மக்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தில் அவர்களது கட்டிடங்கள் கட்டப்பட்டதாக கூறுகின்றனர்.
"அது ஒரு மின்னலைப் போல நடந்தது", என்று கூறுகிறார், அவசர மருத்துவ ஊர்தி ஓட்டுநராய் மாதம் 9,000 ரூபாய் சம்பாதித்து வரும், தெபாசிஷ். அவரது தந்தை பிறந்த வீடான குடிசை வீட்டினை கல் வீடாக மாற்றுவதற்கு தனது நண்பர்கள் மற்றும் உள்ளூர் கடன் கொடுப்பவர்களிடமிருந்து அவர் 1.5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அவரது தாத்தா பாட்டி பல தசாப்தங்களுக்கு முன்னர் சுந்தரவனத்தின் ஒரு பகுதியான, வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியின் இரண்டாம் தொகுதியில் இருந்து கொல்கத்தாவிற்கு வேலை தேடி வந்தனர்.
தெபாசிஷ் கட்டிய வீடு இடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிக வட்டிக்கு அவர் வாங்கிய கடனில் பெரும்பகுதி இன்னமும் இருக்கிறது.
செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று தல்லா காலனியில் வசிப்பவர்களுக்கு சிக்கல் துவங்கியது, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இந்த பாலத்தை சரி செய்ய வேண்டும் என்று வாய்மொழியாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் சில உடமைகளை விட்டு விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும், பழுது நீக்கம் முடிந்தபின்பு திரும்பி அங்கு வந்து கொள்ளலாம் என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது. செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி மாலை இங்குள்ள 60 குடும்பங்களும் அருகிலுள்ள இரண்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் - ஒன்று ரயில்வேக்கு சொந்தமான நிலம், மற்றொன்று மாநில நீர்ப்பாசனத்துறை சொந்தமான கால்வாய் அருகே உள்ள நிலம்.










