“எங்கள் கிராமத்தில் வழக்கமாக திருவிழாவைப் போல இருக்கும்,” என்கிறார் நந்தா கோதர்னி. ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில், அவரது வயலுக்கு அருகே உள்ள பகுதியில் கேட்ஸ் புட்ருக் விவசாயிகள் காளைகளின் உதவியோடு நெல்மணிகளை புதிதாக அறுவடை செய்வார்கள். நவம்பர் மத்தியில் இது முடியும்.
இந்தாண்டு கடந்த மாதம் மத்தியில் திடலும், வயல்களும் சதுப்பு நிலமாக மாறிவிட்டது. நந்தாவும், அவரது கணவர் கைலாஷூம் தானியங்களை அறுவடை செய்வதற்குப் பதிலாக, தங்களது இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிர்களை அக்டோபர் 16,17 தேதிகளில் சுத்தம் செய்தனர்.
இரண்டு நாட்கள் கழித்தும், முழங்கால் வரை வயலில் தண்ணீர் நின்றதால் 42 வயதாகும் நந்தா சூரிய ஒளியில் நெற்கதிர்களை உலர்த்தினார். “இப்படி உலர்த்துவது பயனளிக்குமா என்பது தெரியாது...” எனும் அவர் கண்ணீரை புடவையால் துடைத்துக் கொள்கிறார். (கதிர்களை அறுத்தபோது ஆறு குவிண்டால் வரையிலான தரம் குறைந்த நெல் பதர் கிடைத்தது - கடந்தாண்டு சுமார் 15 குவிண்டால் வரை அறுவடை செய்தார்). வாடா தாலுக்காவில் உள்ள தனியார் அலுவலகத்தில் உதவியாளராக வேலைசெய்யும் 47 வயதாகும் கைலாஷ் மாதம் ரூ. 8,000 சம்பாதிக்கிறார். அவர்களுக்கு 14 வயது மகளும், 10 வயது மகனும் உள்ளனர், இருவரும் உள்ளூர் சில்லா பரிஷத் பள்ளியில் படிக்கின்றனர்.
அக்டோபர் மாதம் பெய்த எதிர்பாராத மழை 1,134 மக்கள்தொகை கொண்ட கேட்ஸ் புட்ருக் கிராமத்தைச் சேர்ந்த நந்தா போன்ற பிற விவசாயிகளையும் பாதித்துவிட்டது
காமினி கோதர்னியின் வயலும் நீரில் மூழ்கிவிட்டன. “நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கிவிட்டன. சேறு நிறைந்துள்ளது,” என்கிறார் அவர். அவரும், அவரது கணவர் மனோஜூம் அக்டோபர் மாதம் தங்களின் நான்கு ஏக்கர் நிலத்தில் சேதமடைந்த பயிர்களை சுத்தம் செய்தனர். கதிர் அரிவாள் கொண்டு சாய்ந்த நெற்கதிர்களை அறுத்தனர். இதற்கு நான்கு விவசாயிகள் அவர்களுக்கு உதவினர். கிராமத்தில் ஒருவருக்கு ஒருவர் இவ்வாறு உதவி வருகின்றனர்.













