காலை 9 மணி இருக்கும்.. வடவர்லபல்லே கிராமத்துக்கு அருகில், ஐதராபாத் - சிறிசைலம் நெடுஞ்சாலையின் ஊடாக, 150 முரட்டுப் பசுக்களை எஸ்லாவத் பன்யா நாயக் மேய்த்தபடி இருக்கிறார். அவை, கிழக்குத் தொடர்ச்சி மலையின் நல்லமல்லா வனச்சரகத்தில் உள்ள அமராபாத் புலிகள் காப்பகப் பகுதியின் மையமான இடத்துக்குள் நுழைகின்றன. கணிசமான மாடுகள் அங்குள்ள புல்வெளியில் மேயத் தொடங்குகின்றன. மற்றவை, மெல்லிய இலைகளைக் கொண்ட கிளைகளின் பக்கம் போக முயல்கின்றன.
எழுபத்தைந்து வயதான நாயக், இலம்பாடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருடைய மாடுகள் அனைத்தும் - இங்குள்ள பெரும்பாலான கால்நடை வளர்ப்போருடையதைப் போல - துருப்பு இனக் கால்நடைகள்தான். இலம்பாடி (ஒரு பட்டியல் பழங்குடியினர்), யாதவா அல்லது கோல்லா (ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டோர்), செஞ்சு (பாதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட ஒரு பழங்குடியினர்) ஆகியோரே, துருப்பு மாடுகளை பாரம்பரியமாக வளர்த்துவருகிறார்கள். இந்த மாடுகளுக்கு சிறிய, கூர்மையான கொம்புகளும் கடினமான, வலுவான கால்களும் இருக்கும். இவை, மாறுபட்ட நிலப்பரப்புகளுக்கு எளிதில் நகர்ந்துகொள்கின்றன - அதாவது, ஈர நைப்புள்ள மண்ணுள்ள பகுதிக்கும் அதேநேரம் வறண்ட சரளை மண்பகுதிக்கும், கனமான சுமைகளை எளிதில் இழுத்துச் செல்கின்றன. அத்துடன், குறைவான தண்ணீரை வைத்தே குறிப்பிட்ட பகுதியின் வெப்பத்தைத் தாக்குப்பிடித்து வாழமுடியும்.
அமராபாத் மண்டலானது, தெலுங்கானா - கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களுக்கு கிழக்கே இருக்கிறது. இதனால் அந்த எல்லைப் பகுதியிலிருந்து மாடுகளை வாங்க நிறைய விவசாயிகள் வருகிறார்கள். இந்த மாடுகள், புள்ளிகளைக் கொண்டிருப்பதால் இங்குள்ளவர்கள் 'போடா துருப்பு' என்று பெயர் வைத்துள்ளனர். தெலுங்கில், 'போடா' என்றால் புள்ளி, ’துருப்பு 'என்றால் கிழக்கு - கிழக்குப் புள்ளி மாடுகள் என்று பொருள். உழவு ஊர்திகளையோ பிற பண்ணை இயந்திரங்களையோ வாங்கமுடியாத சிறு, குறு விவசாயிகளுக்கு, இந்த போடாதுருப்புகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.















