வெயில் நிறைந்த பகல் பொழுதில் 39 வயது சுனிதா ராணி உள்ளிட்ட சுமார் 30 பெண்கள் பெருமளவில் திரண்டு தங்களது உரிமைக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “வேலை உறுதி, ஊதியம் நிச்சயமல்ல“ என்கிறார் சுனிதா. “போக மாட்டோம், போக மாட்டோம்” என்று இந்தப் பெண்கள் முழக்கமிடுகின்றனர்.
சிவப்பு நிற சீருடையணிந்து டெல்லி-ஹரியாணா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோனிபட் நகர அரசு பொது மருத்துமனையின் வெளியே புல்வெளியில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். தரை விரிப்பில் அமர்ந்தபடி சுனிதா ராணி அரசுக்கு வைக்கும் தங்களின் கோரிக்கைகளைப் பட்டியலிடுகிறார்.
இந்த பெண்கள் யாவரும் ஆஷாவைச் சேர்ந்தவர்கள். அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயல்பாடுகள் எனும் ஆஷா நாட்டின் தேசிய கிராம சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுகிறது. இந்திய கிராமப்புற மக்கள் தொகையுடன் நாட்டின் பொது சுகாதார அமைப்பும் இணைந்து இதனை செயல்படுத்துகிறது. நாடெங்கும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் சுகாதாரம் தொடர்புடைய தேவைகள், அவசர உதவிகளை அளிக்கும் முதன்மைப் பணியாளர்களாக உள்ளனர்.
ஊட்டச்சத்து, துப்புரவு, தொற்று நோய், காச நோய் நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளச் செய்வது உள்ளிட்ட 12 வகையான முதன்மைப் பணிகளுடன் 60 துணைப் பணிகளையும் அவர்கள் செய்ய வேண்டும்.
இவற்றுடன் இன்னும் பல பணிகளை அவர்கள் செய்ய வேண்டும். “பிரசவகால பராமரிப்பு, குழந்தை பிறப்பு புள்ளி விவரங்கள் போன்ற பணிகளை செய்வதற்கு தான் எங்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்“ என்கிறார் சுனிதா. சோனிபட் மாவட்டத்தின் 2,593 மக்கள்தொகை கொண்ட நாதுப்பூர் கிராமத்தை கவனித்து வரும் மூன்று ஆஷா பணியாளர்களில் இவரும் ஒருவர்.








