முதலில் அவரது தந்தை. பிறகு அவரது தாய். கோவிட்-10 இரண்டாவது அலையின் போது 2021 மே மாதம் பெற்றோருக்கு அடுத்தடுத்து காய்ச்சல் வந்ததால் புருஷோத்தம் மிசால் பதற்றமடைந்தார். “கிராமத்தில் பலருக்கும் ஏற்கனவே தொற்று இருந்தது,” என்கிறார் புருஷோத்தமின் மனைவி விஜய்மாலா. “அந்த சமயம் நாங்கள் அச்சத்தில் இருந்தோம்.”
மகாராஷ்டிராவில் உள்ள தங்களது பீட் மாவட்ட பொது மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதாக வந்த செய்திகளை புருஷோத்தம் ஏற்கனவே படித்தவிட்டார்.“தனியார் மருத்துவமனையில் பெற்றோரை சேர்த்தால் செலவு அதிகமாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்,” என்கிறார் விஜய்மாலா. “ஒருவர் [வெறும்] ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தால்கூட கட்டணம் லட்சங்களில் வரும். [ரூபாயில்].” அது புருஷோத்தம் ஓராண்டில் ஈட்டும் வருவாயைவிட அதிகமாகும்.
வறுமையிலும் அக்குடும்பம் கடன் ஏதுமின்றி சமாளித்து வந்தது. பார்லி தாலுக்காவில் உள்ள ஹிவாரா கோவர்தன் எனும் அவரது கிராமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிர்சலாவில் தேநீர் கடை நடத்தி வரும் 40 வயது புருஷோத்தமுக்கு மருத்துவச் செலவுக்காக கடன் வாங்குவது மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. 2020 மார்ச் மாதம் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு கடை பெரும்பாலும் மூடியே கிடந்தது.
தாய்க்கு காய்ச்சல் ஏற்பட்ட அன்றைய இரவு புருஷோத்தம் படுக்கையில் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தார். காலை நான்கு மணியளவில் அவரது மனைவியிடம் சொன்னார்: “கோவிட் வந்திருந்தால் என்ன செய்வது?” என தங்கள் வீட்டின் தகர கூரையை விரித்து பார்த்தபடி விழித்திருந்ததாக நினைவு கூர்கிறார் 37 வயது விஜய்மாலா. கவலைப்படாதீர்கள் என்று அவரது மனைவி ஆறுதல் கூறியுள்ளார், “கவலைப்படாதே, நீ உறங்கச் செல் என்று அவர் என்னிடம் சொன்னார்.”











