மலேரிய பரிசோதனைப் பெட்டியை பையில் தேடிக் கொண்டிருந்தார். பைக்குள் மருந்துகளும் இரும்புச் சத்து மாத்திரைகளும் ரத்த அழுத்துப் பரிசோதனை இயந்திரமும் இன்னும் பலவையும் இருந்தன. இரண்டு நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்த குடும்பத்துப் பெண் படுக்கையில் சோகமாகப் படுத்திருந்தார். அவரின் காய்ச்சல் அதிகரித்துக் கொண்டிருந்தது. பரிசோதனையில் நோய் உறுதியானது.
மீண்டும் பைக்குள் அவர் தேடினார். 500 மில்லி லிட்டர் குளுக்கோஸ் பாட்டிலை எடுத்தார். பெண்ணின் படுக்கையில் ஏறிக் கூரையில் ஒரு பிளாஸ்டிக் கயிறைப் போட்டு, குளுக்கோஸ் பாட்டிலை வேகமாக கட்டி விட்டார்.
ஜார்கண்டின் பஷ்சிமி சிங்பும் மாவட்டத்திலும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் மருத்துவச் சேவைகளை கடந்த 10 வருடங்களாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் 35 வயது ஜோதி பிரபா கிஸ்போட்டா ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரும் இல்லை. பயிற்சி பெற்ற செவிலியரும் இல்லை. அவர் எந்த ஒரு அரசு ம்ருத்துவமனை அல்லது சுகாதார மையம் ஆகியவற்றுடன் பணியாற்றுபவர் இல்லை. ஆனால் ஒராவோன் பழங்குடியைச் சேர்ந்த இந்த இளம்பெண்தான் உதவிக்கு நாடப்படும் முதல் நபர். பல நேரங்களில் மக்களுக்கான, குறிப்பாக பழங்குடி கிராம மக்களின், கடைசி நம்பிக்கையாகவும் அவர்தான் இருக்கிறார்.
கிராமப்புற இந்தியாவின் சுகாதார சேவகர்களில் 70 சதவிகித பேர் இவரைப் போன்ற RMP-கள்தான். RMP என்றால் பதிவு செய்த மருத்துவப் பணியாளர் என தவறான அர்த்தம் கொடுக்கக் கூடும். ஆனால் கிராமப்புற மருத்துவப் பணியாளர் என்பதற்கான ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே RMP. இணையான தனியார் சுகாதாரத்தை கிராமப்புற இந்தியாவில் நடத்துவதால், தகுதிப் பெறாத இந்த மருத்துவப் பயிற்சியாளர்கள், கல்விசார் இலக்கியங்களில் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். சுகாதாரம் சம்பந்தப்பட்ட அரசுக் கொள்கைகளையும் தெளிவின்மையுடனே அவை அணுகுகின்றன.
RMP-கள் பெரும்பாலும் இந்தியாவின் எந்த மருத்துவக் கவுன்சிலிலும் பதிவு செய்திருப்பதில்லை. ஹோமியோபதி அல்லது யுனானி மருத்துவர்களாக சிலர் பதிவு செய்திருக்கலாம். ஆனால் ஆங்கில மருந்துகளும் கொடுப்பார்கள்.
பிகார் அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து, வேலைவாய்ப்பற்ற கிராமப்புற மருத்துவப் பயிற்சியாளர்களுக்கான RMP சான்றிதழை அலபதி மருத்துவத்துக்கென ஜோதி பெற்றிருக்கிறார். 10,000 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆறு மாதப் பயிற்சியை அங்கு அவர் எடுத்துக் கொண்டார். அந்த நிறுவனம் தற்போது இல்லை.

















