"என்னிடம் மொபைல் போன் இல்லை, நான் எவ்வாறு அரசாங்கத்திடம் பதிவு செய்வது?" என்று தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள அன்னாரம் கிராமத்தில் செங்கல் சூளை தொழிலாளியாக பணியாற்றி வரும் கூனி தமாலியா கேட்டார். அவரையும் அவரது குழந்தைகளையும் ஒடிசாவுக்கு அழைத்துச் செல்லும் சார்மிக் சிறப்பு ரயிலில் செல்வதற்கு அவரது பெயரை பதிவு செய்ய நாங்கள் அங்கே வந்து இருக்கிறோமா என்று அவர் ஆச்சரியப்பட்டார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தெலுங்கானாவின் அரசாங்க இணையதளத்தில் போக்குவரத்துக்கான கோரிக்கையை பதிவு செய்ய ஒரு மொபைல் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும், ஒடிசா அரசாங்கமும் புலம்பெயர்ந்தவர்களை திரும்பப் பெறுவதற்கு அதையேதான் கோருகிறது.
"தவிர நான் அவர்களின் ஆதார் அட்டைகளை எங்களது கிராமத்திலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். அவர்கள் ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுவார்களா?" என்று 15 வயதாகும் அவரது மகன் பக்தா மற்றும் ஒன்பது வயதாகும் மகன் ஜெகன்நாத் ஆகியோரை கவலையுடன் பார்த்தபடி அவர் கேட்டார். கூனி தனக்கு 40 வயது இருக்கும் என்று கூறினார், ஆனால் அவரது ஆதார் அட்டையோ அவருக்கு 64 வயது என்கிறது. "எனக்குக் இந்த அட்டையில் என்ன எழுதி இருக்கிறது என்பது தெரியாது; அவர்களே தான் கணினியில் பதிவு செய்தனர்", என்று கூறுகிறார்.
அவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இச்சூளையில் வேலையைத் தொடங்கினார், மே மாத இறுதியில் அவரது பணியை முடித்துவிட்டு ஒடிசாவுக்கு திரும்புவார். ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவு செங்கல் சூளையில் பணியாற்றிவரும் கைம்பெண்ணான கூனிக்கு முதல்முறையாக எல்லாவற்றையும் நிச்சயமற்றதாக்கிவிட்டது. பௌத் மாவட்டத்தில் இருக்கும் கனத்தமால் வட்டத்தைச் சேர்ந்த தேமுகனி கிராமத்திலிருந்து லாரி மூலம் அவரும் அவரது குழந்தைகளும் கும்மாடிதாலா மண்டலத்தில் இருக்கும் அன்னாரம் கிராமத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
கூனி தனது குழந்தைகளுடன் அன்னாரத்துக்கு வந்த சில வாரங்களுக்குப் பிறகு 42 வயதாகும் சுமித்ரா பிரதான் 40 வயதாகும் அவரது கணவர் கோபால் ராவத் மற்றும் அவரது 5 குழந்தைகளுடன் ஒடிசாவில் இருந்து அங்கு வந்து சேர்ந்தார். கடந்த ஏழு எட்டு வருடங்களாக அவர்கள் பாலங்கீர் மாவட்டத்திலுள்ள தித்லாகர் வட்டத்தின் சகத்காத் கிராமத்தில் இருந்து வருகின்றனர். அவர்களது மூத்த மகன் ராஜூவுக்கு 20 வயது ஆகிறது அவரும் தனது பெற்றோருடன் சூளையில் பணியாற்றி வருகிறார். அவர்களது வீட்டை விட்டு அவர்கள் கிளம்பும்போதும் ஒப்பந்ததாரர் 3 செங்கல் சுமக்கும் பணியாளர்களுக்கான முன்பணமாக மொத்தம் 75 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.







