“மக்கள் எங்களை வசதியான, பெரிய விவசாயிகள் என நினைக்கின்றனர்,” என்கிறார் தாதாசாஹேப் சபிக். “எங்களின் நிழல் வலைகளைக் காணும்போது இப்படி ஒரு பொது கருத்து வருவதுண்டு. ஆனால் விவசாயம் என்று வரும்போது நீங்கள் கசப்பான உண்மையை காணலாம். நாங்கள் பெரிய கடனில் இருக்கிறோம். எங்களால் எந்த கடனையும் திருப்பிச் செலுத்த முடியாது.”
நாஷிக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் தாதாசாஹேபும் அமைதியாக பங்கேற்றார். அவருடன் ராஜேந்திர பகவத்தும் வந்திருந்தார் – இருவரும் வெவ்வேறு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான விவசாயிகளைப் போன்று இவர்களும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள். (குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மகாராஷ்டிரா அரசு உறுதி அளித்ததால் பிப்ரவரி 21ஆம் தேதி விவசாயிகளின் பேரணி நிறுத்தப்பட்டது.)



