தாரிபாவில் ஜனவரி 2005 அன்று போலி தேவி விஷ்னோயை சூனியக்காரியாக முத்திரை குத்தப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்டது. மாந்திரீகம் செய்து தங்கள் குழந்தைகளுக்கு நோய் உண்டாக்குகிறார் என அன்றைய நாள் கிராமத்தில் உள்ள மூன்று பெண்கள் போலி மீது குற்றம் சுமத்தினர். ஒட்டுமொத்த கிராமத்தின் முன் அவரை சூனியக்காரி என அழைத்து, மற்றவர்களின் உடம்பிற்குள் சென்று நோய் உண்டாக்குகிறார் என அவர் மீது குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு போலியும் அவரது குடும்பமும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். தாரிபாவிலிருந்து 14கிமீ தொலைவிலுள்ள பில்வாரா நகரத்திற்கு அவர்கள் சென்றனர்.
தற்போது 50 வயதாகும் போலி, மாந்திரீகம் மீது தனக்கு நம்பிக்கையில்லை என கூறுகிறார். ஆனால், குற்றம் சுமத்தியவர்கள் தன்னிடமிருந்து பிரசாதம் வாங்க ஒத்துக்கொண்டு என்னை “மன்னிக்காதவரை” சூனியக்காரி என்ற முத்திரையிலிருந்து என்னால் வெளிவர முடியாது என விளக்கம் தருகிறார்.
அவர்களை சமாதனப்படுத்த, தன்னுடைய உறவினர்கள் மற்றும் கிராமத்தினரின் அறிவுரையின் படி, பல வருடங்களாக புஷ்கர், ஹரித்வார், கேதர்நாத் போன்ற ஊர்களுக்கு யாத்திரை சென்று, கங்கையில் குளிப்பது, விஷேச நாட்களில் விரதம் இருப்பது என பலவற்றை முயற்சித்துள்ளார் போலி. இதுபோன்று செய்தால் தன் மீது சுமத்தப்பட்ட சூனியக்காரி என்ற களங்கத்திலிருந்து விடுபடலாம் என அவரிடம் கூறியுள்ளனர்.
“எங்கள் பாரம்பரியத்தை பின்பற்றி, யாத்திரை மற்றும் விரதத்திற்குப் பிறகு, சிலரை விருந்திற்கு அழைத்தோம். ஆனால் எங்கள் வீட்டில் உணவருந்த யாரும் வரவில்லை” என கூறுகிறார் போலி. இத்தோடு புறக்கணிப்பை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில், உள்ளூர் திருவிழாக்களின் போது கிராமத்திலும் தங்கள் வீட்டிலும் குடும்பத்தினர் உணவு ஏற்பாடு செய்வார்கள். விருந்திற்காக மட்டுமே இத்தனை வருடங்களில் பத்து லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருப்போம் என மதிப்பிடுகிறார் போலி.
போலி சந்திக்கும் புறக்கணிப்பு பில்வாரி மாவட்டத்தில் ஒன்றும் புதிதல்ல என்று கூறுகிறார் தாரா அலுவாலியா. 2005-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு சில நாட்களுக்கு பிறகு, போலி மற்றும் அவரது குடும்பத்தின் சார்பில் நீதிமன்றம் மூலமாக இவர்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். பில்வாரா நகரத்தைச் சேர்ந்த அலுவாலியா சமூக செயற்பாட்டாளர் ஆவார்.







