தங்களது மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு விகாஷ் யாதவும் லட்சுமன் சிங்கும் கமலா மார்க்கெட்டுக்கு வந்தபோது நண்பகல் தாண்டியிருந்தது. சப்ஸி மண்டி ரயில் நிலையத்திற்கு சற்று தொலைவிலுள்ள வடக்கு-மத்திய டெல்லியின் பிரதாப் நகரிலிருந்து சரக்குகளை எடுத்து வரும் இவர்கள், புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள இரைச்சலான போக்குவரத்து மையத்தில் அதை பட்டுவாடா செய்கிறார்கள்.
லூதியானாவிலிருந்து வரும் சைக்கிள் பாகங்கள், ஆக்ராவிலிருந்து வரும் ஷூக்கள், மத்தியபிரதேசம் மற்றும் பஞ்சாப்பிலிருந்து வரும் கோதுமை, தென் இந்தியாவிலிருந்து வரும் மோட்டார் பாகங்கள் போன்ற பொருட்களை ரயில்களிலும் லாரிகளிலும் கொண்டு வரும் டிரான்ஸ்போர்டர்ஸ், அவைகளை குறுகிய தூரங்களுக்கு எடுத்துச்செல்ல மாட்டுவண்டிகளை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
சரக்குகளை ஏற்றுவது மற்றும் இறக்குவது போன்ற சேவைகளையும் வழங்குகிறார்கள் மாட்டுவண்டி ஓட்டுனர்கள். “டெம்போவில் ஒருமுறை சரக்கு ஏற்றிச் செல்ல 1000 ரூபாய் செலவாகும். ஆனால் மாட்டுவண்டி மலிவானது. இல்லையென்றால் எங்களை தேடி யாரும் வரமாட்டார்கள். தினமும் இரண்டு முறை செல்லும் எங்களுக்கு ஒரு நாளைக்கு எப்படியும் 800-900 ரூபாய் கிடைக்கும்” என்கிறார் 23 வயதான விகாஷ்.
தங்கள் குடோனில் இருந்து அருகிலுள்ள கடைகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல மாட்டுவண்டிகளை வாடகைக்கு எடுக்கிறார்கள் டிரான்ஸ்போர்டர்ஸ். நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு தங்கள் பொருட்களை அனுப்புவதற்கும் பல கடைக்காரர்கள் மாட்டுவண்டிகளை நாடுகிறார்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் சில பகுதிகளுக்கு மட்டுமே மாட்டுவண்டிகள் செல்ல வேண்டும் என டெல்லி போக்குவரத்து காவல்துறை விதிகளில் தடை இருந்தாலும், வேறு எந்த கடுமையான விதிகளும் கூறப்படவில்லை என்கிறார் 27 வயதான லட்சுமன். அவர் கூறுகையில், “நாங்கள் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை. போக்குவரத்து காவலுருக்கு நாங்கள் அபராதமும் செலுத்துவதில்லை. அதனால்தான் நாங்கள் இதை பயன்படுத்துகிறோம்” என்கிறார்










