எஸ்.இராமசாமி தன் மூத்த நண்பருக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கிறார். அவரைப் பார்க்க வரும் முக்கிய விருந்தினர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக என்னிடத்தில் பெருமையாகச் சொல்கிறார். செய்தித்தாள் பிரதிநிதிகள், குடிமைப் பணி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எனப் பலரும் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். தகவல்களைத் துல்லியமாகத் தரவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். ஏனெனில், அவருடைய மூத்த நண்பர் சாதாரண மனிதரல்ல, பெரும் பிரபலஸ்தர்.
அவர்தான் மளிகம்பட்டு கிராமத்தின் ஆயிரம் காச்சி மரம். வயது 200 ஆண்டுகள்.
ஆயிரம் காச்சி அகன்று, நெடிதுயர்ந்து, செழித்து நிற்கும் பலாமரம். சுற்றி வருவதற்கு 25 நொடிகள் பிடிக்கும் அளவுக்கு அகன்றது. அதன் முன்னே நிற்பது கௌரவம். அதைச் சுற்றி வருதல் பெருமை. இராமசாமி நான் செய்வதைக் கண்டு புன்னகைக்கிறார். மகிழ்ச்சியில் அவரது பெரிய மீசை கண்களைத் தொட்டுவிடுமளவுக்கு உயர்கிறது. கடந்த 71 ஆண்டுகளில், இந்த மரத்தைப் பார்த்து நெகிழும் பல விருந்தினர்களைப் பார்த்திருப்பாரல்லவா? எனக்குச் சொல்ல அவரிடம் நிறைய இருக்கிறது.
காவி வேட்டியும் தோளில் சிறிய துண்டும் அணிந்த இராமசாமி, பலாமரத்துக்கு முன்பு நின்று கொண்டு பேசத் தொடங்குகிறார். ’இப்ப நாம இருக்கறது கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, மளிகம்பட்டு குக்கிராமம். அஞ்சு தலைமுறைக்கு முன்னால எங்க மூதாதைகள் நட்டது. இதுக்குப் பேரும் ஆயிரம் காச்சி. ஆயிரம் காச்சி இப்போ 200-300 பழம் குடுக்குது. 8-10 நாள்ல பழுத்திரும். சுளைகள் பார்க்க நல்ல நிறமா இருக்கும். ரொம்ப சுவையா இருக்கும். பழுக்காத சுளையை வச்சி பிரியாணி கூடப் பண்ணலாம்’. அரை நிமிடத்தில் அதன் பெருமைகளைப் போற்றிப் பாடிவிட்டார். கால ஓட்டத்தில் உறுதியாக வளர்ந்து நிற்கும் மரம் போல, அவரது பேச்சு உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறது.


















