1980களிலிருந்து ஜாம்நகரும் சுற்றுப்புறங்களும் தொழில்மயமாக்கலைச் சந்தித்து வருகின்றன. “உப்பள ஆலைகள், எண்ணெய் படகுத்துறைகள் மற்றும் இப்பகுதியில் இருக்கும் பிற தொழில்மயமாக்கலால் விளைவு இருக்கிறது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் ரிதுஜா. “அவர்களின் பயன்பாட்டுக்காக நிலம் கொடுக்கப்பட்டதால் ஏற்படும் சிரமங்களை இவர்கள் சந்திக்கிறார்கள். ஆனால், மேய்ப்பர்களின் வாழ்வாதாரத் தொழில் என்று வரும்போது இத்துறை பாதுகாவலராக மாறி விடுகிறது. சட்டத்தின் 19 (g) பிரிவுக்கு இது எதிரானதாகும். ‘எந்தத் தொழிலையும் செய்வதற்கான உரிமை’யை அச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.”
பூங்காவுக்குள் மேய்ச்சல் தடை செய்யப்பட்டதிலிருந்து வனத்துறையினரால் தொடர்ந்து ஒட்டக மேய்ப்பர்கள் அவமதிப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் ஆடாம் ஜாட். “சில வருடங்களுக்கு முன், ஒட்டகங்களை இங்கே மேய்த்ததற்காக என்னை கைது செய்தனர். 20,000 ரூபாய் அபராதம் கட்டினேன்,” என்கிறார் அவர். இங்கிருக்கும் பிற மேய்ப்பர்களும் இத்தகைய அனுபவங்களை பகிர்கின்றனர்.
“ஒன்றிய அரசின் 2006ம் ஆண்டுச் சட்டத்தாலும் உதவியில்லை,” என்கிறார் ரிதுஜா மித்ரா. 2006ம் ஆண்டு வனஉரிமைச் சட்டத்தின் 3 (1) (d) பிரிவு, மேய்ச்சலுக்கும் பயன்பாட்டுக்குமான சமூக உரிமைகளையும் மேய்ச்சல் நாடோடி சமூகங்களின் குறிப்பிட்ட காலத்தைய பயன்பாட்டையும் அனுமதிக்கிறது.
”ஆனால் இந்த மல்தாரிகள், வன அலுவலர்களால் மேய்ச்சலுக்காக தொடர்ந்து தண்டனை அளிக்கப்படுகிறார்கள். 20,000லிருந்து 60,000 ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டி வருகிறது,” என்கிறார் ரிதுஜா. வன உரிமைச் சட்டம் முன் வைக்கும் பிற பாதுகாப்புகள் யாவும் அமலாக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.
இங்குள்ள சதுப்புப் பகுதியை தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து, வேறு யாரையும் விட நன்கு அறிந்த, மேய்ப்பர்களை ஈடுபடுத்தாமல் விரிவுபடுத்த முயற்சிப்பது பயனற்றதாகத் தெரிகிறது. "நாங்கள் இந்த நிலத்தைப் புரிந்து கொள்கிறோம். சூழலியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம். மேலும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் கொள்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்களும் அல்ல" என்று ஜகபாய் ரபாரி கூறுகிறார். “நாங்கள் கேட்பதெல்லாம்: கொள்கைகளை உருவாக்கும் முன் தயவுசெய்து எங்களைக் கேளுங்கள் என்றுதான். இல்லையெனில், இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 1,200 பேரின் உயிரும், ஒட்டகங்களின் உயிரும் ஆபத்தைச் சந்திக்கும்.”.