“ஒரு குச்சியை வைத்து அடித்தேன். ஆனால் அது என் மீது குதித்து, என் கழுத்தையும் கைகளையும் கீறிவிட்டது. காட்டுக்கள் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தேன். என்னுடைய ஆடைகள் முழுக்க ரத்தம். வீட்டுக்கு நடந்து வர மிகவும் கஷ்டப்பட்டேன்.” சிறுத்தையின் அந்த தாக்குதலுக்கு பிறகு விஷால்ராம் மார்க்கம் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். அவரின் மாடுகளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதில் அவருக்கு சந்தோஷம். “சிறுத்தை என் நாய்களைக் கூட தாக்கியது. அவை ஓடி விட்டன,” என்கிறார் அவர்.
2015ம் ஆண்டில் அச்சம்பவம் நடந்தது. மார்க்கம் அச்சம்பவத்தை சொல்லி சிரித்துவிட்டு, கொடிய மிருகங்களை அதற்கு முன்னும் பிறகும் கூட நெருக்கத்தில் பார்த்திருப்பதாக அவர் சொல்கிறார். அவர் மாடு மேய்க்கும் சட்டீஸ்கரின் ஜபாரா காட்டில் சிறுத்தைகள் மட்டும் இருக்கவில்லை. புலிகள், நரிகள், ஓநாய்கள், காட்டு நாய்கள், காட்டுப் பன்றிகளும் இருக்கின்றன. மான்களும் காட்டு எருமைகளும் கூட இருக்கின்றன. கோடை காலத்தில் காட்டில் இருக்கும் சில நீரோடைகளுக்கு கால்நடைகள் செல்லும்போது, வேட்டை விலங்குகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு இரண்டு மடங்கு, மூன்று மடங்கு ஆகிவிடுகிறது.
“என்னுடைய மாடுகள் காட்டுக்குள் தாமாகவே சுற்றும். அவை திரும்பவில்லை என்றால் மட்டுமே நான் சென்று தேடுவேன்,” என்கிறார் மார்க்கம். “சில நேரங்களில் மாடுகள் அதிகாலை 4 மணி வரை திரும்பாது. இரண்டு டார்ச் லைட்களை பயன்படுத்தி காட்டுக்குள் இரவில் அவற்றை தேடுவேன்.” காட்டுக்குள் வெறும் பாதங்களுடன் சென்றதால் ஏற்பட்ட கால் புண்களையும் கொப்பளங்களையும் நம்மிடம் காட்டுகிறார்.
அவரின் சுதந்திரமான மாடுகள், ஜபார்ரா கிராமத்துக்கு அருகே இருக்கும் காட்டுக்குள், மேய்ச்சல் நிலங்களைத் தேடி 9-10 கிலோமீட்டர் தூரத்துக்கு அன்றாடம் சுற்றித் திரியும். “கோடை காலத்தில் அவை உணவுக்காக இரண்டு மடங்கு தூரம் பயணிக்கும். காட்டை இனி நம்பியிருக்க முடியாது. மாடுகள் பசியால் இறந்து கூட போகலாம்,” என்கிறார் மார்க்கம்.









