“பாபா இங்கு என்னுடன் இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று மெல்லிய குரலில் சொன்னார் பிரியங்கா மொண்டல். நினைவுகளின் வலி தாங்காமல் வருத்தத்தில் இருந்தார். இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிற உடையில், ரஜத் ஜூப்ளி கிராமத்தில் உள்ள தனது கணவரின் வீட்டுக்கு செல்ல பிங்க் மற்றும் நீல நிற பல்லக்கில் தனது மடியில் மலர்களுடன் அமர்ந்திருந்தார்.
கொல்கத்தாவில் உள்ள தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜத் ஜூப்ளி கிராமத்தில் வசித்து வருபவர் 23 வயதான பிரியங்கா, இவர் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி 27 வயதான ஹிரன்மே மொண்டலை திருமணம் செய்து கொண்டார். ஹிரன்மே இவருக்கு பக்கத்தில் வீட்டில் வசிப்பவர், அவர் கொல்கத்தாவில் உள்ள சில்லறை ஜவுளி விற்பனை கடையில் தள நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், 2019-ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், சுந்தர்பன்னில் உள்ள லஹிரிபூர் கிராம பஞ்சாயத்தில் நடைபெறவிருந்த இவர்களது திருமணம் பிரியங்காவின் 45 வயது தந்தை அர்ஜூன் மொண்டல் 2019-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி ஒரு புலியால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. அர்ஜூன் ஒரு மீனவர். இவர் சுந்தர்பன் புலிகள் காப்பகத்தின் நடுவில் உள்ள பிர்காலி காசி வனப் பகுதிக்கு நண்டுகளை வேட்டையாட அடிக்கடி சென்று வருவது வழக்கம். இவரது உடல் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒவ்வொரு முறையும் அர்ஜூன் ஆபத்தான அந்த வனப்பகுதிக்கு நண்டுகள் வேட்டையாடச் செல்லும் போது, அவர் பாதுகாப்புடன் திரும்பி வர வேண்டும் என்கிற அச்சத்திலேயே குடும்பத்தினர் இருப்பார்கள். கடைசியாக வேட்டையாடுவதற்காக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்ற போது அவருக்கு மகளின் திருமணம்தான் மனதில் இருந்தது.
“பிரியங்காவின் திருமணத்துக்கு எங்களுக்கு பணம் தேவை. அர்ஜூன் காட்டுக்குப் போவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், ஏதோ மோசமான சம்பவம் நடக்கப் போகிறது என்பது போல ஒரு உணர்வு அவருக்கு முன்னதாக இருந்தது” என்கிறார் அவரது மனைவி புஷ்பா.

























